இரண்டாம் பத்து

1048 வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே. இனிதுவந்து,
மாதவ மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்றவெந்தை,
கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 1.1

1049 உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 1.2

1050 இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
ஏத்து வாருற வோடும், வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,
வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
1.3

1051 பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே.
பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
1.4

1052 பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்
எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 1.5

1053 துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,
தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய்,
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,
அமர நாயகறகு இன்றடிமைத்தொழில் பூண்டாயே. 1.6

1054 தருக்கி னால்சமண் செய்து சோறுதண்தயிரினால்திரளை,மி டற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. 1.7

1055 சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்
தே,என் னெஞ்சமென் பாய்,.எனக் கொன்று சொல்லாதே,
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய,
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 1.8

1056 கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என் நெஞ்சமென் பாய். துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா,
ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. 1.9

1057 மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில் மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. 1.10

1058 காசை யாடை மூடியோடிக் காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார் வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.1

1059 தைய லாள்மேல் காதல்செய்த தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர் செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.2

1060 முன்னோர் தூது வானரத்தின் வாயில்
மொழிந்து,அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள
முனிந்து அவனே பின்னோர் தூத னாதிமன்னர்க் காகிப்
பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா னெவ்வுள் கிடந்தானே. 2.3

1061 பந்த ணைந்த மெல்விரலாள் பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும் நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமானெவ்வுள் கிடந்தானே. 2.4

1062 பால நாகி ஞாலமேழு முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும் தாமரைக் கண்ணன்எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும் நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி லெவ்வுள் கிடந்தானே. 2.5

1063 சோத்த நம்பி யென்றுதொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்தனம்பி செங்கணம்பி யாகிலும்
தேவர்க்கெல்லாம், மூத்த நம்பி முக்கணம்பி யென்று
முனிவர்த்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.6

1064 திங்க ளப்பு வானெரிகாலாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன் பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான் சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. 2.7

1065 முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன் ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான் எவ்வுள் கிடந்தானே. 2.8

1066 பந்தி ருக்கும் மெல்விரலாள் பாவை
பனிமலராள், வந்தி ருக்கும் மார்வன்நீல
மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர் நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா னெவ்வுள் கிடந்தானே. 2.9

1067 இண்டை கொண்டு தொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைபுறவில் மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய் மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே லாள்வ ரருலகே. 2.10

1068 விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. 3.1

1069 வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக் குவலயத் தோர்தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. 3.2

1070 வஞ்சனை செய்யத் தாயுரு வாகி
வந்தபே யலறிமண் சேர,
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
நாதனைத் தானவர் கூற்றை,
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
துதிசெய்யப் பெண்ணுரு வாகி,
அஞ்சுவை யமுத மன்றளித் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.3

1071 இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த

எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது
மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
அந்தமோ டினவா நிரைதள ராமல்
எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.4

1072 இந்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும்
இன்பன்நற் புவிதனக் கிறைவன்,
தந்துணை யாயர் பாவைநப் பின்னை
தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி
வாயுரை தூதுசென் றியங்கும்
என்துணை, எந்தை தந்தைதம் மானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.5

1073 அந்தகன் சிறுவ னரசர்த்த மரசற்
கிளையவ னணியிழை யைச்சென்று,
எந்தமக் குரிமை செய் எனத் தரியாது
எம்பெரு மானருள் என்ன,
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்த்தம்
பெண்டிரு மெய்திநூ லிழப்ப,
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.6

1074 பரதனும் தம்பி சத்துருக் கனன்னும்
இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற
இராவணாந் தகனையெம் மானை,
குரவமே கமழும் குளிர்ப்பொழி லூடு
குயிலொடு மயில்கள்நின் றால,
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.7

1075 பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோ ராயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்
கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.8

1076 மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3.9

1077 மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடமா ளிகையும்மண் டபமும்,
தென்னன்தொண் டையர்க்கோன் செய்தநன்மயிலைத்
திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
சுகமினி தாள்வர்வா னுலகே.
3.10

1078 அன்றாயர்கு லக்கொடி யோடணிமா
மலர்மங்கையொ டன்பளவி,அவுணர்க்
கென்றானு மிரக்கமி லாதவனுக்குக்
குறையுமிட மாவது,இரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்த்திருவா
லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,
நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.1

1079 காண்டாவன மென்பதொர் காடமரர்க்
கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்
அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அவுணனவன் மார்வகலம்
உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.2

1080 அலமன்னு மடல்சுரி சங்கமெடுத்
தடலாழியி னாலணி யாருருவில்,
புலமன்னு வடம்புனை கொங்கையினாள்
பொறைதீரமு னாளடு வாளமரில்,
பலமன்னர் படச்சுட ராழியினைப்
பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.3

1081 தாங்காததோ ராளரி யாயவுணன்
றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத்
ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப்
பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.4

1082 மாலுங்கட லாரம லைக்குவடிட்
டணைகட்டி வரம்புருவமதிசேர்
கோலமதி ளாயவி லங்கைகெடப்
படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால்
கதிர்நீண்முடிபத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.5

1083 பாராருல கும்பனி மால்வரையும்
கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்
காரா தென நின்றவ னெம்பெருமான்
அலைநீருல குக்கரசாகிய,அப்-
பேரானைமுனிந்தமுனிக்கரையன்
பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.6

1084 புகராருரு வாகிமுனிந்தவனைப்
புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்
நகராயின பாழ்பட நாமமெறிந்-
ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,
பகராதவ னாயிர நாமமடிப்
பணியாதவ னைப்பணி யாமலரில்,
நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.7

1085 பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்
பிணந்தின்மடவாரவர் போல்,அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால்
அவர்செய்கை வெறுத்தணி மாமலர்த்தூய்,
நச்சிநம னாரடை யாமைநமக்
கருள்செய் எனவுள்குழைந் தார்வமொடு,
நிச்சம்நினைவார்க்கருள் செய்யுமவற்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.8

1086 பேசுமள வன்றிது வம்மின்நமர்.
பிறர்க்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,
நாசமது செய்திடும் ஆதன்மையால்
அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில்
மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்
நீசரவர் சென்றடை யாதவனுக்
கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4.9

1087 நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல்லான் கலியன்
ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,உடனே
விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்
எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக்
குடைமன்னவ ராயடி கூடுவரே.
4.10

1088 பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.1

1089 பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
பொய்ந்_லை மெய்ந்_லென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை
என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.2

1090 உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.
5.3

1091 பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்
பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்னோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்
கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.4

1092 பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்
பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்
பொய்யறைவாய்ப் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்த்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.5

1093 கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்
கிளர்ப்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப், படுமதத்த களிற்றின்கொம்பு
பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி
இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.6

1094 பேணாத வலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்க்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போர்வல்லோனைப்
பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான் தன்னை
உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே.
5.7

1095 பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை
இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.8

1096 தொண்டாயர் தாம்பரவு மடியினானைப்
படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை
விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
5.9

1097 படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்
படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்
கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையைந்து மைந்தும்வல்லார்
தீவினையை முதலரிய வல்லார்தாமெ.
5.10

1098 நண்ணாத வாளவுண
ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும்
பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடன்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை
யிறைப்பொழுது மெண்ணோமே.
6.1

1099 பார்வண்ண மடமங்கை
பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வகத்தி
லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க்
கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா
ரவரெம்மை யாள்வாரே.
6.2

1100 ஏனத்தி னுருவாகி
நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால்
மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத்
தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை
நினைவாரென் நாயகரே.
6.3

1101 விண்டாரை வென்றாவி
விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத்
தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா
ரவரெங்கள் குலதெய்வமே.
6.4

1102 பிச்சச் சிறுபீலிச்
சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு
மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர்
கடன்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை
நச்சென்றன் நன்னெஞ்சே.
6.5

1103 புலன்கொள்நிதிக் குவையோடு
புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெக்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மல்லைக்
கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்ளென் மடநெஞ்சே.
6.6

1104 பஞ்சிச் சிறுகூழை
யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர்
கடன்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே.
6.7

1105 செழுநீர் மலர்க்கமலம்
திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ
ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும்
கடன்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத்
தொழுவாயென் தூய்நெஞ்சே.
6.8

1106 பிணங்களிடு காடதனுள்
நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம்
பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக்
கடன்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை
வணங்கென்றன் மடநெஞ்சே.
6.9

1107 கடிகமழு நெடுமறுகில்
கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு
மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன்
கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம்
முதல்வர்முத லாவாரே.
6.10

1108 திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை
செழுங்கட லமுதினிற் பிறந்த
அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும்
ஆகிலு மாசைவி டாளால்,
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
சொல்லுநின் தாள்நயந் திருந்த
இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.1

1109 துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள்
துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள்
கோலநன் மலர்க்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த,
மாலென்னும் மாலின மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.2

1110 சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்
பொருகடல் புலம்பிலும்
புலம்பும், மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்
வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.3

1111 ஊழியில் பெரிதால் நாழிகை. என்னும்
ஒண்சுடர் துயின்றதால் என்னும்,
ஆழியும் புலம்பும். அன்றிலு முறங்கா
தென்றலும் தீயினிற் கொடிதாம்,
தோழியோ. என்னும் துணைமுலை யரக்கும்
சொல்லுமி னென்செய்கேன் என்னும்,
ஏழையென் பொன்னுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.4

1112 ஓதிலும் உன்பே ரன்றிமற் றோதாள்
உருகும்நின் திருவுரு நினைந்து,
காதன்மை பெரிது கையற வுடையள்
கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்,
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்,
ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.5

1113 தன்குடிக் கேதும் தக்கவா நினையாள்
தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
மென்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.6

1114 உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்
உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,
வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை
மாயனே. என்றுவாய் வெருவும்,
களங்கனி முறுவல் காரிகை பெரிது
கவலையோ டவலம்சேர்ந் திருந்த,
இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.7

1115 அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்
கழியுமா லென்னுள்ளம். என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்
போதுமோ நீர்மலைக் கென்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்
கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.8

1116 பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள்
பொருகயல் கண்துயில் மறந்தாள்,
அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ
ணங்கினுக் குற்றநோ யறியேன்,
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
வீங்கிய வனமுலை யாளுக்கு,
என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.
7.9

1117 அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
ஆயஎம் மாயனே. அருளாய்,
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்
இடவெந்தை யெந்தை பிரானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா
யொலிகள், பன்னிய பனுவல் பாடுவார்
நாளும்
பழவினை பற்றறுப் பாரே.
7.10

1118 திரிபுர மூன்றெரித் தானும்மற்றை
மலர்மிசை மேலய னும்வியப்ப,
முரிதிரை மாகடல் போல்முழங்கி
மூவுல கும்முறை யால்வணங்க,
எரியன கேசர வாளெயிற்றோ
டிரணிய னாக மிரண்டுகூறா,
அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.1

1119 வெந்திறல் வீரரில் வீரரொப்பார்
வேத முரைத்திமை யோர்வணங்கும்,
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்
தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,
வந்து குறளரு வாய்நிமிர்ந்து
மாவலி வேள்வியில் மண்ணளந்த,
அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.2

1120 செம்பொ னிலங்கு வலங்கைவாளி
திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,
உம்ப ரிருசுட ராழியோடு
கேடக மொண்மலர் பற்றியெற்றே,
வெம்பு சினத்தடல் வேழம்வீழ
வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட
அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.3

1121 மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி
மாமழை காத்தொரு மாயவானை
யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும்
ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி
வேதமு னோதுவர் நீதிவானத்து,
அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.4

1122 கலைகளும் வேதமும் நீதிநூலும்
கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை
நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும்
நீர்மையி நாலருள் செய்து,நீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற,
அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.5

1123 எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்
ஏது மறிகிலம், ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
தம்மன வாகப் புகுந்து,தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப்
போதவிழ் நீலம் புனைந்தமேகம்,
அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.6

1124 முழுசிவண் டாடிய தண்டுழாயின்
மொய்ம்மலர்க் கண்ணியும்,மேனியஞ்சாந்-
திழிசிய கோல மிருந்தவாறும்
எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார்,
எழுதிய தாமரை யன்னகண்ணும்
ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,
அழகிய தாமிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.7

1125 மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க
வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால்
சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்க்கட லேயுமொப்பார்
கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.8

1126 தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி
வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்
நானிவர் தம்மை யறியமாட்டேன்
அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன
அட்ட புயகரத் தேனென்றாரே.
8.9

1127 மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்
நீள்முடி மாலை வயிரமேகன்,
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி
அட்ட புயகரத் தாதிதன்னை,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.
8.10

1128 சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை
யூறொலி நாற்றமும் தோற்றமுமாய்,
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
பல்லவன் வில்லவ னென்றுல கில்பல
ராய்ப்பல வேந்தர் வணங்குகழற்
பல்லவன், மல்லையர் கோன்பணிநத பர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.1

1129 கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட
ரும்நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட
மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு
வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந்த பர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.2

1130 உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு
கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு
வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.3

1131 அண்டமு மெண்டிசை யும்நில னுமலை
நீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி
மாடங்கள் சூந்தழ காயகச்சி,
விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந்
தாரிரி யச்செரு வில்முனைந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.4

1132 தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர்
தீர்த்தர வம்வெருவ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப்
பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.5

1133 திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற
லோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதிடம்பொரு
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை
வெல்கொடி வேற்படை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.6

1134 இலகிய நீண்முடி மாவலி தன்பெரு
வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி
மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.7

1135 குடைத்திறல் மன்னவ னாயொரு கால்குரங்
கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி
மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு
வச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.8

1136 பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந்
தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்க்கெ டக்கடல்
போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்பணிந் தபர
மேச்சுர விண்ணக ரமதுவே.
9.9

1137 பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந்
தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை
வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல்
லார்த்திரு மாமகள் தன்னரு
ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு
நீருல காண்டு திகழ்வர்களே.
9.10

1138 மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்
வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.1

1139 கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
தீபம்கொண் டமரர்த்தொழப் பணங்கொள்பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.2

1140 கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்
கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கெள்கி,
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி
அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,
எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட
இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட,
செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.3

1141 தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து
தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை,
ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும்
அடியவர்கட் காரமுத மானான் றன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.4

1142 கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி
கணையொன்றி நால்மடிய இலங்கைதன்னுள்,
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்
பெருந்தகையோ டுடந்துணித்த பெம்மான்றன்னை,
மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும்
மண்டபமொண் தொளியனைத்தும் வாரமோத,
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.5

1143 உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்
குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,
தறியார்ந்த கருங்களிறே போல நின்று
தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு,
வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.6

1144 இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி
இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு
வஞ்சகஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,
கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று
காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள்சோலைத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.7

1145 பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு
பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
செருக்களத்துத் திறலழியச் செற்றான்றன்னை,
போரேறொன் றுடையானு மளகைக் கோனும்
புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்ப்போல்,
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.8

1146 தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,
காவடிவின் கற்பகமே போல நின்று
கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
10.9

1147 வாரணங்கொ ளிடர்க்கடிந்த மாலை நீல
மரதகத்தை மழைமுகிலே போல்வான்றன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
திருக்கோவ லூரதனுள் கண்டேன், என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க லாலுகங் கலந்தங்க் கேத்தக்
கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.
10.10