ஆறாம் பத்து

1448 வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல்
தொண்டரு மமரும் பணியநின்று
அங்கண்டமொ டகலிட மளந்தவனே.
ஆண்டாயுனைக் கான்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.1

1449 அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே
விண்ணவ ரமுதுண அமுதில்வரும்
பெண்ணமு துண்டவெம் பெருமானே .
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.2

1450 குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட
தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம்
விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங்
கழல்நிற அம்பது வானவனே.
ஆண்டாயுன்னைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.3

1451 நிலவொடு வெயில்நில விருசுடரும்
உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுருவினையாய்
அலைகட லாலிலை வளர்ந்தவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.4



1452 பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்
சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங்
கோரெழுத் தோருரு வானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.5

1453 கார்கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச்
சீர்கெழு நான்மறை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.6

1454 உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்
இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்
இருக்கினி லின்னிசை யானவனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.7

1455 காதல்செய் திளையவர் கலவிதரும்
வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன் நான்.
போதலார் நெடுமுடிப் புண்ணியனே.
ஆண்டாயுனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே
1.8

1456 சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்
காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர்
ஆதல்செய் மூவுரு வானவனே.,
ஆண்டாய் உனைக் காண்பதோ
ரருளெனக் கருளுதியேல்
வேண்டேன்மனை வாழ்க்கையை
விண்ணகர் மேயவனே.
1.9



1457 பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே 1.10

1458 பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கட னாயின வாயிலொட்டி
அறுத்தேன், ஆர்வச்செற் றமவை தன்னை மனத்தகற்றி
வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே 2.1

1459 மறந்தே னுன்னைமுன்னம fமறந் தமதி யின்மனத்தால்,
இறந்தே னெத்த னையுமத னாலிடும் பைக்குழியில்
பிறந்தே யெய்த்தொழிந் தேன்பெ ருமானே திருமார்பா
சிறந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே 2.2

1460 மானெய் நோக்கியர் தம்வயிற் றுக்குழி யிலுழைக்கும்,
ஊனேராக்கை தன்னை உ<த வாமை யுணர்ந்துணர்ந்து,
வானே மானில மே வந்து வந்தென் மனத்திருந்த
தேனே, நின்னடைந் தேன்திரு விண்ண்ணகர் மேயவனே 2.3

1461 பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே 2.4

1462 பாண்டேன் வண்டறை யும்குழ லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம் அர சாகி, முன்னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந் தோமனை வாழ்க்கைதன்னை
வேண்டேன், நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே 2.5

1463 கல்லா வைம்புலன் களவை கண்டவா செய்யகில்லேன்,
மல்லா, மல்லம ருள்மல் லர்மாள மல்லடர்த்த
மல்லா, மல்லலம் சீர்மதிள் நீரிலங் கையழித்த
வில்லா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே 2.6

1464 வேறா யானிரந் தேன்வெகு ளாது மனக்கொளந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக் கக்குடி விட்டவரை,
தேறா துன்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே 2.7

1465 தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட உற்று
விரைந்துவந்தார், மூவா வானவர் தம்முதல்
வா மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே 2.8

1466 போதார் தாமரை யாள்புல விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்.சுடர் போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே 2.9

1467 தேனார் பூம்புற வில்திரு விண்ணகர் மேயவனை,
வானா ரும்மதில் சூழ்வயல் மங்கையர் கோன், மருவார்
ஊனார் வேல்கலி யனொலி செய்தமிழ் மாலைவல்லார்,
கோனாய் வானவர் தம்கொடி மாநகர் கூடுவரே 2.10

1468 துறப்பேன் அல்லேனின் பம்துற வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற வாமை பெற்றது, நின்
திறத்தே னாதன் மையால் திருவிண் ணகரானே 3.1

1469 துறந்தே னார்வச் செற்றச்சுற் றம்து றந்தமையால்,
சிறந்தேன் நின்னடிக்கே யடிமை திருமாலே,
அறந்தா னாய்த்திரி வாய் உன் னையென் மனத்தகத்தே,
திறம்பா மல்கொண் டேன்திரு விண்ணகரானே 3.2

1470 மானேய் நோக்குநல்லார் மதிபோல்முகத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் டந்துன் னடைந்தேன்,
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ் திருவிண் ணகரானே 3.3

1471 சாந்தேந்து மென்முலை யார்தடந் தோள்புண ரின்பவெள்ளத்
தாழ்ந்தேன், அருநகரத் தழுந்தும் பயன்படைத்தேன்,
போந்தேன், புண்ணியனே. உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன், நின்னடைந்தேன் திருவிண் ணகரானே 3.4

1472 மற்றோர் தெய்வமெண்ணே னுன்னையென் மனத்துவைத்துப்
பெற்றேன், பெற்றதுவும் பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே. திருவிண் ணகரானே 3.5

1473 மையொண் கருங்கடலும் நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும் இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே _ண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன் திருவிண் ணகரானே 3.6

1474 வேறே கூறுவதுண் டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால் குணங்கொண்டு மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால் திருவிண் ணகரானே 3.7

1475 முளிதீந்த வேங்கடத்து மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிதீந்த மாமரம்போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, லடியேற்க்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது? திருவிண் ணகரானே 3.8

1476 சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட
நல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ,
மல்லாகுடமாடி. மதுசூத னே உலகில்
செல்லா நல்லிசையாய் திருவிண் ணகரானே 3.9

1477 தாரார் மலர்க்கமலத் தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில் திருவிண் ணகரானை
காரார் புயல்தடக்கைக் கலிய னொலிமாலை,
ஆரா ரிவைவல்லார் அவர்க்கல்லல் நில்லாவே 3.10

1478 கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால்,
பண்ணின் மொழியார் பைய நடமின் என் னாதமுன்,
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியு மாயினான்,
நண்ணு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.1

1479 கொங்குண் குழலார் கூடி யிருந்து சிரித்து, நீர்
இங்கென்னிருமி யெம்பால் வந்ததென் றிகழாதமுன்,
திங்க ளெரிகால் செஞ்சுட ராயவன் தேசுடை
நங்கள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.2

1480 கொங்கார் குழலார் கூடி யிருந்து, சிரித்து, எம்மை
எங்கோலம் ஐயா என்னினிக் காண்பதென் னாதமுன்
செங்கோல் வலவன் தான்பணிந் தேத்தித் திகழுமூர்,
நங்கோன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.3

1481 கொம்பும் அரவமும் வல்லியும் வெண்றனுண் ணேரிடை,
வம்புண் குழலார் வாச லடைத்திக ழாதமுன்,
செம்பொன் கமுகினந் தான்கனி யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.4



1482 விலங்கும் கயலும் வேலுமொண் காவியும் வெண்றகண்
சலம்கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்திக
ழாதமுன், மலங்கும் வராலும் வாளையும் பாய்வயல்
சூழ்தரு,
நலங்கொள் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.5

1483 மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து,
என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.6

1484 வில்லேர் நுதலார் வேட்கையை மாற்றிச் சிரித்து, இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறனுரை கேட்பதன்முன்,
சொல்லார் மறைநான் கோதி யுலகில் நிலாயவர்,
நல்லார் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.7

1485 வாளொண்கண் ணல்லார் தாங்கள் மதனனென் றார்தம்மை,
கேளுமின் களீலையோடு ஏங்கு கிழவன் என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.8

1486 கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே 4.9

1287 பிறைசேர் நுதலார் பேனுதல் நம்மை யிலாதமுன்,
நறைசேர் பொழில்சூழ் நறையூர் தொழுனெஞ்ச மேயென்ற,
கறையார் நெடுவேல் மங்கையர் கோன்கலி கன்றிசொல்,
மறவா துரைப்பவர் வானவர்க் கின்னர சாவாரே 4.10

1488 கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர்
துலங்கல் தீர நல்கு சோதிச் சுடராய,
வலங்கை யாழி யிடங்கைச் சங்க முடையானூர்,
நலங்கொள் வாய்மை யந்தணர் வாழும் நறையூரே 5.1

1489 முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம்f செந்தளிர் கோதிக் குயில்கூவும்,
நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே 5.2

1490 ஆனைப் புரவி தேரொடு காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும் மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே 5.3

1491 உறியார் வெண்ணெ யுண்டு உர லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில் தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை பாடும் நறையூரே 5.4

1492 விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர்,
பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று
நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே 5.5

1493 பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே 5.6

1494 முந்து நூலும் முப்புரி நூலும் முன்னீந்த,
அந்த ணாளன் பிள்ளையை அந்நான்றளித்தானூர்,
பொந்தில் வாழும் பிள்ளைக் காகிப் புள்ளோடி,
நந்து வாரும் பைம்புனல் வாவி நறையூரே 5.7

1495 வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே 5.8

1496 பாரை யூரும் பாரந் தீரப் பார்த்தன்தன்
தேரை யூரும் தேவ தேவன் சேருமூர்,
தாரை யூரும் தண்தளிர் வேலிபுடைசூழ,
நாரை யூரும் நல்வயல் சூழ்ந்த நறையூரே 5.9

1497 தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே 5.10

1498 அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு மணிவண்டு
வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.1

1499 கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை
இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.2

1500 பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்
கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.3

1501 பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம்
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.4

1502 அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர்
அரியுருவா யிரணியன தாகங்கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு
விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்
புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.5

1503 தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,
தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த்
தானாய னாயினான் சரணென்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.6

1504 முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்
இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய
வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.7

1505 முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்
சிரந்துணிந்தான் திருவடி_ம் சென்னிவைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.8

1506 தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
6.9

1507 செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்
புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல்
பாடுவார் வியனுலகில் நமனார்பாடி
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே
6.10

1508 ஆளும் பணியு மடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவெய்தச்
சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயு மனையாரும்
வேற்க ணாரும் பயில்வீதி
நாளும் விழவி னொலியோவா
நறையூர் நின்ற நம்பியே
7.1

1509 முனியாய் வந்து மூவெழுகால்
முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட
தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப்
பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே
7.2

1510 தெள்ளார் கடல்வாய் விடவாய
சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி
துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி
புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே
7.3

1511 ஓளியா வெண்ணெ யுண்டானென்
றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக்
காமர் தென்றல் அலர்தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே
7.4

1512 வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும்
நறையூர் நின்ற நம்பியே
7.5

1513 வள்ளி கொழுநன் முதலாய
மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட விறல்வாணன்
வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்
பள்ளி கமலத் திடைப்பட்ட பகுவா
யலவன் முகம்நோக்கி
நள்ளியூடும் வயல்சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே
7.6

1514 மிடையா வந்த வேல்மன்னர்
வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர்
கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து
வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ்
நறையூர் நின்ற நம்பியே
7.7

1515 பந்தார் விரலாள் பாஞ்சாலி
கூந்தல் முடிக்கப் பாரதத்து
கந்தார் களிற்றுக் கழல்மன்னர்
கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு
சிவனு மனைய பெருமையோர்
நந்தா வண்கை மறையோர் வாழ்
நறையூர் நின்ற நம்பியே
7.8

1516 ஆறும் பிறையும் அரவமும்
அடம்பும் சடைமே லணிந்து,உடலம்
நீறும் பூசி யேறூரும்
இறையோன் சென்று குறையிரப்ப
மாறொன் றில்லா வாசநீர்
வரைமார் வகலத் தளித்துகந்தான்
நாறும் பொழில்சூழ்ந் தழகாய
நறையூர் நின்ற நம்பியே
7.9

1517 நன்மை யுடைய மறையோர்வாழ்
நறையூர் நின்ற நம்பியை
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்
கலிய னொலிசெய்
தமிழ்மாலை பன்னி யுலகில் பாடுவார்
பாடு சார பழவினைகள்
மன்னி யுலகம் ஆண்டுபோய்
வானோர் வணங்க வாழ்வாரே
7.10

1518 மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே 8.1

1519 முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை
தென்னாலி மேய திருமாலை யெம்மானை
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே 8.2

1520 தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே 8.3

1521 ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே 8.4

1522 கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த
வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக
நல்லனை நாடி நறையூரில் கண்டேனே 8.5

1523 உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே 8.6

1524 கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே 8.7

1525 மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்
பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே 8.8

1526 பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே 8.9



1527 மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே 8.10

1528 பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே. 9.1

1529 கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி

வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்
பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற
அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே.
9.2

1530 சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே. 9.3

1531 துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. 9.4

1532 அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும்
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும்
புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. 9.5

1533 பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்

மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே.
9.6

1534 சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்
தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே. 9.7

1535 குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே. 9.8

1536 மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும்
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே. 9.9

1537 திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே 9.10

1538 கிடந்த நம்பி குடந்தை மேவிக்
கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
எறிஞர் அரணழிய
கடந்த நம்பி கடியா ரிலங்கை
உலகை யீரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்
நமோநா ராயணமே
10.1

1539 விடந்தா னுடைய அரவம் வெருவச்
செருவில் முனநாள்,முன்
தடந்தா மரைநீர்ப் பொய்கை
புக்கு மிக்க தாடாளன்
இடந்தான் வையம் கேழ லாகி
உலகை யீரடியால்
நடந்தா னுடைய நாமம் சொல்லில்
நமோநா ராயணமே
10.2

1540 பூணா தனலும் தறுகண் வேழம்
மறுக வளைமருப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட
பெருமான் திருமார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல்
ஆய்ச்சி தயிர்வெண்ணெய்
நாணா துண்டான் நாமம் சொல்லில்
நமோநா ராயணமே
10.3

1541 கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள்
நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த
அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த
எந்தை, விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில்
நமோநா ராயணமே
10.4

1542 குடையா வரையால் நிரைமுன் காத்த
பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல்
நின்றான் தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது
மேவி வெங்கூற்றம்
நடையா வுண்ணக் கண்டான் நாமம்
நமோநா ராயணமே
10.5

1543 கான எண்கும் குரங்கும் முசுவும்
படையா அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரு முரைமின்
நமோநா ராயணமே
10.6

1544 நின்ற வரையும் கிடந்த கடலும்
திசையு மிருநிலனும்
ஒன்று மொழியா வண்ண மெண்ணி
நின்ற அம்மானார்
குன்று குடையா வெடுத்த அடிக
ளுடைய திருநாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்
நமோநா ராயணமே
10.7

1545 கடுங்கால் மாரி கல்லே பொழிய
அல்லே யெமக்கென்று
படுங்கால் நீயே சரணென் றாயர்
அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்
நமோநா ராயணமே
10.8

1546 பொங்கு புணரிக் கடல்சூ ழாடை
நிலமா மகள்மலர்மா
மங்கை பிரமன் சிவனிந் திரன்வா
னவர்நா யகராய்
எங்க ளடிக ளிமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின்
நமோநா ராயணமே
10.9

1547 வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று
நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு
நம்பி நாமத்தை
காவித் தடங்கண் மடவார் கேள்வன்
கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம்
நில்லா வீயுமே
10.10