ஒன்பதாம் பத்து

1748 வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய
வாளர வினணை மேவி
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச்
சாமமா மேனியென் தலைவன்
அங்கமா றைந்து வேள்விநால் வேதம்
அருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.1

1749 கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக்
கராம்கொளக் கலங்கியுள் நினைந்து
துவளமேல் வந்து தோன்றிவன் முதலை
துணிபடச் சுடுபடை துரந்தோன்
குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர்
கொய்ம்மலர் நெய்தலொண் கழனி
திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.2

1750 வாதைவந் தடர வானமும் நிலனும்
மலைகளும் அலைகடல் குளிப்ப
மீதுகொண் டுகளும் மீனுரு வாகி
விரிபுனல் வரியகட் டொளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல்
புதுவிரை மதுமல ரணைந்து
சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.3

1751 வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி
வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலை
தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்
து உயர்கொடி யொளிவளர் மதியம்,
சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.4

1752 மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்
மூவடி நீரொடும் கொண்டு
பின்னுமே ழுலகும் ஈரடி யாகப்
பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்
தலைபுன லிலைக்குடை நீழல்
செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.5

1753 மழுவினால் அவனி அரசைமூ வெழுகால்
மணிமுடி பொடிபடுத்து உதிரக்
குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம்
தவிர்ந்தவன் , குலைமலி கதலிக்
குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும்
குளிர்தரு சூதம்மா தவியும்
செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.6

1754 வானுளா ரவரை வலிமையால் நலியும்
மலிகடல் இலங்கையார் கோனை
பானுசேர் சரத்தால் பனங்கனி போலப்
பருமுடி யுதிரவில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக்
கணமுகில் முரசநின் றதிர
தேனுலா வரிவண் டின்னிசை முரலும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.7

1755 அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை
அஞ்சிடா தேயிட, அதற்குப்
பெரியமா மேனி யண்டமூ டுருவப்
பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்
வரையின்மா மணியும் மரகதத் திரளும்
வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும்
திருக்கண்ணங் குடியுள் நின் றானே.
1.8

1756 பன்னிய பாரம் பார்மகட் கொழியப்
பாரத மாபெரும் போரில்
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர்
மைத்துனர்க் குய்த்தமா மாயன்
துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும்
சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
1.9

1757 கலையுலாவல்குல் காரிகை திறத்துக்
கடல்பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற
திருக்கண்ணங் குடியுள்நின் றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன்
மானவேல் கலியன்வா யொலிகள்
உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும்
வல்லவர்க் கில்லைநல் குரவே.
1.10

1758 பொன்னிவர் மேனி மரக தத்தின்
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில்நல் வேத மோதும்
வேதியர் வானவ ராவர்தோழீ,
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
அச்சோ ஒருவர் அழகியவா.
2.1

1759 தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும்
சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த
சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன்
செஞ்சுட ராழியும் சங்குமேந்தி
பாடக மெல்லடி யார்வ ணங்கப்
பன்மணி முத்தொடி லங்குசோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும்
அச்சோ ஒருவர் அழகியவா.
2.2

1760 வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம்
தாயின நாயக ராவர் தோழீ.
தாமரைக் கண்கள் இருந்தவாறு,
சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச்
செவ்விய வாகி மலர்ந்தசோதி
ஆயிரம் தோளொ டிலங்கு பூணும்
அச்சோ ஒருவர் அழகியவா.
2.3

1761 வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல்
கையன ஆழியும் சங்கும் ஏந்தி,
நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார்
நாகரி கர்பெரி துமிளையர்
செம்பவ ளமிவர் வாயின் வண்ணம்
தேவ ரிவர துருவம்சொல்லில்
அம்பவ ளத்திர ளேயு மொப்பர்
அச்சோ ஒருவர் அழகியவா.
2.4

1762 கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவல ரேயொப்பர் குன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்கு டையர்
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்
மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோவொருவரழகியவா.
2.5

1763 வெஞ்சின வேழம் மருப்பொ சித்த
வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை
தஞ்சுடை யாளர்கொல் யான றியேன்
தாமரைக் கண்க ளிருந்தவாறு
கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த
காளையா ரவர்கண் டார்வணங்கும்
அஞ்சன மாமலை யேயு மொப்பர்
அச்சோவொருவரழகியவா.
2.6

1764 பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும்
பேரரு ளாளர்கொல்? யானறியேன்,
பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ.
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணிகெழு தாமரை யன்ன கண்ணும்
அங்கையும் பங்கய மேனிவானத்து,
அணிகெழு மாமுகி லேயு மொப்பர்
அச்சோவொருவரழகியவா.
2.7

1765 மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட
மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்?
மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த
மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார்
அச்சோவொருவரழகியவா.
2.8

1766 எண்டிசை யுமெறி நீர்க்க டலும்
ஏழுல குமுட னேவிழுங்கி
மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும்
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர்
கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்
அண்டத் தமரர் பணிய நின்றார்
அச்சோவொருவரழகியவா.
2.9

1767 அன்னமும் கேழலும் மீனு மாய
ஆதியை நாகை யழகியாரை
கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க்கலி கன்றி குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை
ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார்,
மன்னவ ராயுல காண்டு மீண்டும்
வானவ ராய்மகிழ் வெய்துவரே.
2.10

1768 தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு
பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய்
என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம்,
புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே. 3.1

1769 உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு
முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,
பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்
பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே. 3.2

1770 ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு
தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம்
போது நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே. 3.3

1771 கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன்
மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே. 3.4

1772 உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு
துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின்
தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,
புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே. 3.5

1773 எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு
வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம்
கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும்,
புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே. 3.6

1774 பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய்
இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை
புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே. 3.7

1775 அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,
சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,
உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே. 3.8

1776 ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின்
ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப்
போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே. 3.9

1777 இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல்
கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை
வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே. 3.10

1778 காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏவாயி னூடியங்கும் எகில் கொடிதாலோ
பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே. 4.1

1779 முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்
பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே. 4.2

1780 வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்
செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள்
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே. 4.3

1781 பரிய இரணியன் தாகம் அணியுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்
அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே. 4.4

1782 வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,
எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும்,
புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே. 4.5

1783 சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்
அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்
செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே. 4.6

1784 கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ
புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே. 4.7

1785 தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு
பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே. 4.8

1786 வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே. 4.9

1787 பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை
கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே. 4.10

1788 தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த்
தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்
துவள என் னெஞ்சகம் சோரவீரும்
சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்
இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார்
என்னல மைந்துமுன் கொண்டுபோன
குவளை மலர்நிற வண்ணர்மன்னு
குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
5.1

1789 தாதவிழ் மல்லிகை புல்லிவந்த
தண்மதி யினிள வாடையின்னே
ஊதை திரிதந் துழறியுண்ண
ஓரிர வுமுறங் கேன் உறங்கும்
பேதையர் பேதைமை யாலிருந்து
பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறுமலர் மங்கைமார்வன்
குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
5.2

1790 காலையும் மாலையொத் துண்டுகங்குல்
நாழிகை யூழியின்f நீண்டுலாவும்,
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும்
பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி
மாலவன் மாமணி வண்ணன்மாயம்
மற்று முளவவை வந்திடாமுன்
கோல மயில்பயி லும்புறவில்
குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
5.3

1791 கருமணி பூண்டுவெண் ணாகணைந்து
காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்
ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள
ஓரிர வுமுறங் காதிருப்பேன்
பெருமணி வானவ ருச்சிவைத்த
பேரரு ளாளன் பெருமைபேசி
குருமணி நீர்கொழிக் கும்புறவில்
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.4

1792 திண்டிமி லேற்றின் மணியும் ஆயன்
தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற
கோல இளம்பிறை யோடுகூடி
பண்டையவல்லவிவைநமக்குப்
பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு
குறுங்யுஉடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.5

1793 எல்லியும் நன்பக லுமிருந்தே
ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர்திறம் நாமறியோம்
நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை
வல்லன சொல்லி மகிழ்வரேனும்
மாமணி வண்ணரை நாம்மறவோம்
கொல்லை வளரிள முல்லைபுல்கு
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.6

1794 செங்க ணெடிய கரியமேனித்
தேவ ரொருவரிங் கேபுகுந்து என்
அங்கம் மெலிய வளைகழல
ஆதுகொ லோ என்று சொன்னபின்னை
ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ
டாடு மதனை யறியமாட்டேன்
கொங்கலர் தண்பணை சூழ்புறவில்
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.7

1795 கேவல மன்று கடலினோசை
கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என்
ஆவி யளவும் அணைந்துநிற்கும்
அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு
ஏவலங் காட்டி இவனொருவன்
இப்படி யேபுகுந் தெய்திடாமுன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.8

1796 சோத்தென நின்று தொழவிரங்கான்
தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான்
போயின வூரறி யேன் என்கொங்கை
மூத்திடு கின்றன மற்றவன்றன்
மொய்யக லம் அணை யாதுவாளா
கூத்த னிமையவர் கோன்விரும்பும்
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.9

1797 செற்றவன் தென்னிலங் கைமலங்கத்
தேவர்பி ரான்திரு மாமகளைப்
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட
பேரரு ளாளன் பெருமைபேசக்
கற்றவன் காமரு சீர்க்கலியன்
கண்ணகத் தும்மனத் துமகலாக்
கொற்றவன் முற்றுல காளிநின்ற
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
5.10

1798 அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்,
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்
தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே. 6.1

1799 துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள்,
பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,
செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே. 6.2

1800 வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்,
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்,
ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி,
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே. 6.3

1801 சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன்
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்,
இரவும் பகலும் ஈன்தேன் முரல, மன்றெல்லாம்
குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே. 6.4

1802 கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்
ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,
மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே. 6.5

1803 தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி,
தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள்,
மாநீர் வண்ணன் மருவி யுறையும்இடம் வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே. 6.6

1804 வல்லிச் சிறு_ண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற,
அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான்,
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே. 6.7

1805 நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,
ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள்,
தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும்
கூர்வாய் நாரை பேடையொ டாடும் குறுங்குடியே. 6.8

1806 நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,
என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட,
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே. 6.9

1807 சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்,
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்,
கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே. 6.10

1808 தந்தைதாய் மக்களே சுற்றமென்
றுற்றுவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ
பழியெனக் கருதி னாயேல்
அந்தமா யாதியாய் ஆதிக்கும்
ஆதியாய் ஆய னாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.1

1809 மின்னுமா வல்லியும் வஞ்சியும்
வென்ற_ண் ணிடைநுடங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை
அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்
காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.2

1810 பூணுலா மென்முலைப் பாவைமார்
பொய்யினை மெய்யி தெ ன்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ
பிழையெனக் கருதி னாயேல்
நீணிலா வெண்குடை வாணனார்
வேள்வியில் மண்ணி ரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.3

1811 பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்
பணைமுலை அணைதும் நாம் என்று,
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ
பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங்
கடத்துளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.4

1812 மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்
வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ
துயரெனக் கருதி னாயேல்
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய்
வைத்தவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.5

1813 உருவினார் பிறவிசேர் ஊன்பொதி
நரம்புதோல் குரம்பை யுள்புக்கு
அருவிநோய் செய்துநின் றைவர்தாம்
வாழ்வதற் கஞ்சி னாயேல்
திருவினார் வேதநான் கைந்துதீ
வேள்வியோ டங்க மாறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.6

1814 நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை
மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ
பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய்
மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.7

1815 மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்
காலிவை மயங்கி நின்ற
அஞ்சுசேராக்கையை அரணமன்
றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப்
பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.8

1816 வெள்ளியார் பிண்டியார் போதியார்
என்றிவர் ஓது கின்ற
கள்ளநூல் தன்னையும் கருமமன்
றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார்
மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா
வல்லையாய் மருவு நெஞ்சே.
7.9

1817 மறைவலார் குறைவிலார் உறையுமூர்
வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ்
கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய்
ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண்
டின்பநன் கெய்து வாரே.
7.10

1818 முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார்
கலவியை விடுதடு மாறல்
அந்தர மேழும் அலைகட லேழும்
ஆயவெம் மடிகள்தம் கோயில்,
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்
தழுவிவந் தருவிகள் நிரந்து,
வந்திழி சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.1

1819 இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி
எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
சுடர்முடிக் கடவுள்தம் கோயில்
விண்டலர் தூளி வேய்வளர் புறவில்
விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.2

1820 பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப்
பெருநிலம் அருளின்முன் அருளி
அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும்
அளந்தவெம் மடிகள்தம் கோயில்
கணிவளர் வேங்கை நெடுநில மதனில்
குறவர்தம் கவணிடைத் துரந்த
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.3

1821 சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச்
சுடுசரம் அடுசிலைத் துரந்து
நீர்மையி லாத தாடகை மாள
நினைந்தவர் மனம்கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்
கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்
வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.4

1822 வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய
மணிமுடி ஒருபதும் புரள
அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட
அமர்ச்செய்த அடிகள்தம் கோயில்
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப்
பிரசம்வந் திழிதர பெருந்தேன்
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.5

1823 விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று
விளங்கனிக் கிளங்கன்று விசிறி,
குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த
கூத்தவெம் மடிகள்தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்
தடவரைக் களிறென்று முனிந்து
மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.6

1824 தேனுகன் ஆவி போயுக அங்கோர்
செழுந்திரள் பனங்கனி யுதிர
தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர்
எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
வானகச் சோலை மரகதச் சாயல்
மாமணிக் கல்லதர் நிறைந்து,
மானுகர் சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.7

1825 புதமிகு விசும்பில் புணரிசென் றணவப்
பொருகடல் அரவணைத் துயின்று,
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த
பனிமுகில் வண்ணர்தம் கோயில்,
கதமிகு சினத்த கடதடக் களிற்றின்
கவுள்வழிக் களிவண்டு பருக,
மதமிகு சாரல் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.8

1826 புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள்
ஒத்தன பேசவும் உகந்திட்டு,
எந்தைபெம் மானார் இமையவர் தலைவர்
எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் நாளும்,
மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை
வணங்குதும் வாமட நெஞ்சே.
8.9

1827 வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை
மாமணி வண்ணரை வணங்கும்,
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல்
சூழ்வயல் ஆலிநன் னாடன்
கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன்
கலியன்வா யொலிசெய்த பனுவல்,
கொண்டிவை பாடும் தவமுடை யார்கள்
ஆள்வரிக் குரைகட லுலகே.
8.10

1828 மூவரில் முன்முதல் வன்முழங் கார்கட லுள்கிடந்து,
பூவுல ருந்திதன் னுள்புவ னம்படைத் துண்டுமிழ்ந்த,
தேவர்கள் நாயக னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கோவலர் கோவிந் தனைக்கொடி யேரிடை கூடுங்கொலோ. 9.1

1829 புனைவளர் பூம்பொழி லார்பொன்னி சூழரங் கநகருள்
முனைவனை, மூவுல கும்படைத் தமுதல் மூர்த்திதன்னை,
சினைவளர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்றான்
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே. 9.2

1830 உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,
கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,
திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே. 9.3

1831 சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே. 9.4

1832 தானவன் வேள்விதன் னில்தனி யேகுற ளாய்நிமிர்ந்து,
வானமும் மண்ணக மும் அளந் ததிரி விக்கிரமன்,
தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள் கொலோ. 9.5

1833 நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,
வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,
தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ. 9.6

1834 புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ. 9.7

1835 பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே. 9.8

1836 வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை,
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை,
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற,
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே. 9.9

1837 தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,
ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,
மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன
பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே. 9.10

1838 எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு நாயகன், ஏத் தடியவர்
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,
பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி,
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. 10.1

1839

எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள்
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்து, மாருதம்
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே. 10.2

1840 வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை, எமக்கு
ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை,
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே. 10.3

1841 ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து,
உடம்பிலோர் கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு, நன்னறுந்
தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே. 10.4

1842 வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்ம துமலர்த்
தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான்,
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி, வானுயர்
திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே. 10.5

1843 காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,
நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென,
தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே. 10.6

1844 கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,இளந்
தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே. 10.7

1845 பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, அடியேனை யாளுகந்து
ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான்,
தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே. 10.8

1846 கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை,
மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,
மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்,
தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே. 10.9

1847 ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில்
சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை,
நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த,இந்
நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே. 10.10