திருவாய் மொழி எட்டாம் பத்து

3563 தேவிமா ராவார் திருமகள் பூமி
யேவமற் றமரராட் செய்வார்,
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி
வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக்
கண்ணதோர் பவளவாய் மணியே,
ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த
அப்பனே. காணுமா றருளாய். 1.1

3564 காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக்
கண்ணநீர் அலமர வினையேன்
பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே
பிதற்றுமா றருளெனக் கந்தோ,
காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா.
தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ்
பெருநிலம் எடுத்தபே ராளா. 1.2

3565 எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன்
இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்
கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே.
அடியனேன் பெரியவம் மானே,
கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக்
கையுகி ராண்டவெங் கடலே,
அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய்
எங்ஙனம் தேறுவர் உமரே? 1.3

3566 உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்
ஆகியுன் தனக்கன்ப ரானார்
அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை
அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
அமரது பண்ணி அகலிடம் புடைசூழ்
அடுபடை அவித்தாம் மானே,
அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே.
என்னுடை ஆருயி ரேயோ. 1.4

3567 ஆருயி ரேயோ. அகலிடம் முழுதும்
படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,
பேருயி ரேயோ. பெரியநீர் படைத்தங்
குறைந்தது கடைந்தடைத் துடைத்த,
சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர்
போலத்தே வர்க்கும்தே வாவோ,
ஒருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம்
உன்னைநான் எங்குவந் துறுகோ? 1.5

3568 எங்குவந் துறுகோ என்னையாள் வானே.
ஏழுல கங்களும் நீயே,
அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே
அவற்றவை கருமமும் நீயே,
பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்
அவையுமோ நீயின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே
வான்புலம் இறந்ததும் நீயே. 1.6

3569 இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே
நிகழ்வதோ நீயின்னே யானால்,
சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்
றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,
கறந்தபால் நெய்யே. நெய்யின் சுவையே.
கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்தவின் சுவையே. சுவையது பயனே.
பின்னைதோள் மணந்தபே ராயா. 1.7

3570 மணந்தபே ராயா. மாயத்தால் முழுதும்
வல்வினை யேனையீர் கின்ற,
குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர்
கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,
பணங்களா யிரமும் உடையபைந் நாகப்
பள்ளியாய். பாற்கடல் சேர்ப்பா,
வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும்
செய்கையும் யானும்நீ தானே. 1.8

3571 யானும்நீ தானே யாவதோ மெய்யே
அருநர கவையும் நீயானால்,
வானுய ரின்பம் எய்திலென் மற்றை
நரகமே யெய்திலென்? எனிலும்,
யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் நரகம்நா னடைதல்,
வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய்.
அருளுநின் தாள்களை யெனக்கே. 1.9

3572 தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்
தந்தபே ருதவிக்கைம் மாறா,
தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை
அறவிலை செய்தனன் சோதீ,
தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய்.
துணைமலர்க் கண்களா யிரத்தாய்,
தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய்.
தமியனேன் பெரிய அப்பனே. 1.10

3573 பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை
உருத்திரன் அப்பனை, முனிவர்க்
குரிய அப்பனை அமரர் அப்பனை
உலகுக்கோர் தனியப்பன் தன்னை,
பெரியவண் குருகூர் வண்சட கோபன்
பேணின ஆயிரத் துள்ளும்,
உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால்
உய்யலாம் தொண்டீர்.நங் கட்கே. 1.11

3574 நங்கள் வரிவளை யாயங் காளோ.
நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம்
நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன்
தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன்
வேங்கட வாணணை வேண்டிச் சென்றே. 2.1

3575 வேண்டிச்சென் றொன்று பெறுகிற் பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட் கேலும்,
ஈண்டிது ரைக்கும் படியை யந்தோ.
காண்கின்றி லேனிட ராட்டி யேன்நான்,
காண்தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன்நங்கள் கோனைக் கண்டால்,
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின் றேனே. 2.2

3576 காலம் இளைக்கிலல் லால்வி னையேன்
நானிளைக் கின்றிலன் கண்டு கொண்மின்,
ஞாலம் அறியப் பழிசு மந்தேன்
நன்னுத லீர்.இனி நாணித் தானென்,
நீல மலர்நெடுஞ் சோதி சூழ்ந்த
நீண்ட முகில்வண்ணன் கண்ணன் கொண்ட,
கோல வளையொடு மாமை கொள்வான்
எத்தனை காலம்கூ டச்சென்றே? 2.3

3577 கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற் றொழிய இழந்து வைகல்
பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,
மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை
வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,
ஆடல் பறவை உயர்த்த வெல்போர்
ஆழி வலவினை யாதரித்தே. 2.4

3578 ஆழி வலவினை ஆதரிப்பும் ஆங்கவன்
நம்மில் வரவும் எல்லாம்,
தோழியர் காள்.நம் முடைய மேதான்?
சொல்லுவ தோவிங் கரியதுதான்,
ஊழிதோ றூழி ஒருவ னாக
நன்குணர் வார்க்கும் உணர லாகா,
சூழ லுடைய சுடர்கொ ளாதித்
தொல்லையஞ் சோதி நினைக்குங் காலே. 2.5

3579 தொல்லையஞ் சோதி நினைக்குங் காலென்
சொல்லள வன்றிமை யோர்த மக்கும்,
எல்லையி லாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்கவெம் மாமை கொண்டான்,
அல்லி மலர்த்தண் டுழாயும் தாரான்
ஆர்க்கிடு கோவினிப் பூசல் சொல்லீர்,
வல்லி வளவயல் சூழ்கு டந்தை
மாமலர்க் கண்வளர் கின்ற மாலே. 2.6

3580 மாலரி கேசவன் நார ணஞ்சீ
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றென்று,
ஒல மிடவென்னைப் பண்ணி விட்டிட்
டொன்று முருவும் சுவடும் காட்டான்,
ஏல மலர்குழல் அன்னை மீர்காள்.
என்னுடைத் தோழியர் காள்.என் செய்கேன்?
காலம் பலசென்றும் காண்ப தாணை
உங்களோ டெங்க ளிடையில் லையே. 2.7

3581 இடையில் லையான் வளர்த்த கிளிகாள்.
பூவைகள் காள்.குயில் காள்.ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும்
அஞ்சன வெற்பும் அவைந ணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை
அன்றி யவனவை காண்கொ டானே. 2.8

3582 காண்கொடுப் பானல்ல னார்க்கும் தன்னைக்
கைசெயப் பாலதோர் மாயந் தன்னால்,
மாண்குறல் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,
சேண்சுடர்த் தோள்கள் பலத ழைத்த
தேவ பிராற்கென் நிரைவினோடு,
நாண்கொடுத் தேனினி யென்கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள். 2.9

3583 என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்.
யானினச் செய்வதென்? என்நெஞ் சென்னை,
நின்னிடை யேனல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கும் இருகைக் கொண்டு,
பன்னெடுஞ் சூழ்சுடர் ஞாயிற் றோடு
பான்மதி ஏந்தியொர் கோல நீல,
நன்னெடுங் குன்றம் வருவ தொப்பான்
நாண்fம லர்ப்பா தமடைந் ததுவே. 2.10

3584 பாதம் அடைவதன் பாசத் தாலே
மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு,
கோதில் புகழ்க்கண் ணன்தன் னடிமேல்
வண்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
தீதிலந்தாதியோ ராயி ரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்,
ஆதுமோர் தீதில ராகி யிங்கும்
அங்குமெல் லாமமை வார்கள் தாமே. 2.11

3585 அங்கு மிங்கும் வானவர் தானவர் யாவரும்,
எங்கும் இனையையென் றுன்னை அறியகிலா தலற்றி,
அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்,
சங்கு சக்கரக் கையவ னென்பர் சரணமே. 3.1

3586 சரண மாகிய நான்மறை நூல்களும் சாராதே,
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென் றிவைமாய்த்தோம்,
கரணப் பல்படை பற்றற வோடும் கனலாழி,
அரணத் திண்படை யேந்திய ஈசற் காளாயே. 3.2

3587 ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்,
வாளும் வில்லுங் கொண்டுபின் செல்வார் மாற்றில்லை,
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக்காணேன்,
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே. 3.3

3588 ஞாலம் போனகம் பற்றியோர் முற்றா வுருவாகி,
ஆலம் பேரிலை யன்னவ சஞ்செய்யும் அம்மானே,
காலம் பேர்வதோர் காரிரு ளுழியொத் துளதால்,உன்
கோலங் காரேழில் காணலுற் றாழும் கொடியேற்கே. 3.4

3589 கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்,
மடியா தின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான்,
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப்
படிதான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. 3.5

3590 பணியா அமரர் பணிவும் பண்பும் தாமேயாம்,
அணியார் ஆழியும் சங்கமு மேந்தும் அவர்காண்மின்,
தணியா வெந்நோ யுலகில் தவிர்ப்பான், திருநீல
மணியார் மேனியோ டென்மனம் சூழ வருவாரே. 3.6

3591 வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வா னோரடி யானு முளனென்றே. 3.7

3592 என்றே யென்னையுன் ஏரார் கோலத் திருந்தடிக்கீழ்,
நின்றே யாட்செய்ய நீகொண் டருள நினைப்பதுதான்,
குன்றெழ் பாரேழ் சூழ்கடல் ஞாலம் முழுவேழும்,
நின்றே தாவிய நீள்கழல் ஆழித் திருமாலே. 3.8

3593 திருமால் நான்முகன் செஞ்சடை யானென் றிவர்கள்,எம்
பெருமான் தன்மையை யாரறி கிற்பார் பேசியென்,
ஒருமா முதல்வா. ஊழிப் பிரானென் னையாளுடை,
கருமா மேனியன் என்பனென் காதல் கலக்கவே. 3.9

3594 கலக்க மில்லா நல்தவ முனிவர் கரைகண்டோ ர்,
துளக்க மில்லா வானவ ரெல்லாம் தொழுவார்கள்,
மலக்க மெய்த மாகடல் தன்னைக் கடைந்தானை,
உலக்க நாம்புகழ் கிற்பதென் செய்வ துரையீரே. 3.10

3595 உரையா வெந்நோய் தவிர அருள்நீண் முடியானை,
வரையார் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்,
உரையேய் சொல்தொடை ஓரா யிரத்து ளிப்பத்தும்,
நிரையே வல்லார் நீடுல கத்துப் பிறவாரே. 3.11

3596 வார்கடா அருவி யானைமா மலையின்
மருப்பிணைக் குவடிறுத் துருட்டி,
ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின்
மல்லரைக் கொன்றுசூழ் பரண்மேல்,
போர்கடா வரசர் புறக்கிட மாட
மீமசைக் கஞ்சனைத் தகர்த்த,
சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே. 4.1

3597 எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம்
இமையவர் அப்பனென் அப்பன்,
பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்
பொருந்துமூ வுருவனெம் அருவன்,
செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்
திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால்
யாவர்மற் றெனமர் துணையே? 4.2

3598 என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்தவெம் பெருமான்,
முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள
என்னையாள் கின்றேம் பெருமான்,
தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றங்கரை மீபால்
நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம்
நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே. 4.3

3599 பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும்
நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,
குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த
கோலமா ணிக்கமென் எம்மான்,
செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ்
திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு
அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான்
அடியிணை யல்லதோர் அரணே. 4.4

3600 அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை
அதுபொரு ளாகிலும், அவனை
அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா
தாதலால் அவனுறை கின்ற,
நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும்புகை விசும்பொளி மறைக்கும்,
நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றெனக்குநல் லரணே. 4.5

3601 எனக்குநல் லரணை எனதா ருயிரை
இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத்
தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும்
அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றதனுள்கண் டேனே. 4.6

3602 திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தையு ளானே. 4.7

3603 திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச்
செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை
அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக்காப் பவனே. 4.8

3604 படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார்
கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றமர்ந்த நாதனே. 4.9

3605 அமர்ந்த நாதனை யவரவ ராகி
அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள்
தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை
நான்முக னையமர்ந் தேனே. 4.10

3606 தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன்
சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும்
பிறவிமா மாயக்கூத் தினையே. 4.11

3607 மாயக் கூத்தா. வாமனா.
வினையேன் கண்ணா. கண்கைகால்
தூய செய்ய மலர்களாச்
சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி
தண்பா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே.
ஒருநாள் காண வாராயே. 5.1

3608 காண வாராய் என்றென்று
கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால்
இரங்கி யொருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி
றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி
முடிசேர் சென்னி யம்மானே. 5.2

3609 முடிசேர் சென்னி யம்மா.நின்
மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால்தோளும்,
துடிசே ரிடையும் அமைந்ததோர்
தூநீர் முகில்போல் தோன்றாயே. 5.3

3610 தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளீ மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே.
எந்தாய். சொல்ல மாட்டேனே. 5.4

3611 சொல்ல மாட்டேன் அடியேனுன்
துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி
றிரண்டு போலென் னுள்ளவா.,
அல்லல் என்னும் இருள்சேர்தற்
குபாயம் என்னே?, ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட
மாநீர்க் கொண்டல் வண்ணனே. 5.5

3612 கொண்டல் வண்ணா. குடக்கூத்தா.
வினையேன் கண்ணா. கண்ணா,என்
அண்ட வாணா. என்றென்னை
ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான்
விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுள் கழல்லாண
ஒருநாள் வந்து தோன்றாயே. 5.6

3613 வந்து தோன்றா யன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்த தொக்கும் அம்மானே. 5.7

3614 ஒக்கும் அம்மா னுருவமென்
றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள்
காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்று
றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாகா.
வாராய் இதுவோ பொருத்தமே? 5.8

3615 இதுவோ பொருத்தம் மின்னாழிப்
படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
மதுரைப் பிறந்த மாயனே? 5.9

3616 பிறந்த மாயா. பாரதம்
பொருத மாயா. நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா.
உன்னை எங்கே காண்கேனே? 5.10

3617 எங்கே காண்கேன் ஈன்துழாய்
அம்மான் றன்னை யான்? என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே
மகிழ்வர் எல்லியும் காலையே. 5.11

3618 எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. 6.1

3619 திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 6.2

3620 ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. 6.3

3621 மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே. 6.4

3622 கோயில்கொண் டான்தன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னேடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே. 6.5

3623 கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்,
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்டமின் இடரே. 6.6

3624 கொண்டமின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே. 6.7

3625 தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே. 6.8

3626 தாயப் பதிகள்தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே. 6.9

3627 அற்புதன் நாரா யணனரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே. 6.10

3628 சோலை திருக்கடித் தானத் துறைதிரு
மாலை, மதிள்குரு கூர்ச்சடகோபன்fசொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலைவை குந்தத் திருத்தும் வியந்தே. 6.11

3629 இருத்தும் வியந்தென்னைத் தன்பொன் னடிக்கீழென்று,
அருத்தித் தெனைத்தோர் பலநாள் அழைத்தேற்கு,
பொருத்த முடைவா மனன்தான் புகுந்து,என்தன்
கருத்தை யுறவீற் றிருந்தான் கண்டுகொண்டே. 7.1

3630 இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,
திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,
பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே. 7.2

3631 அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,
இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,
பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,
மருள்தானீ தோ?மாய மயக்கு மயக்கே. 7.3

3632 மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,
ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,
தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,
தேயம் திகழும்தன் திருவருள் செய்தே. 7.4

3633 திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,
புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்
திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,
புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே? 7.5

3634 பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்
தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,
கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,
திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே. 7.6

3635 செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,
செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,
அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே. 7.7

3636 அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,
வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,
சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்
நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே. 7.8

3637 வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,
வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்
வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,
வயிற்றிற்கொண்டு மன்னவைத் தேன்மதி யாலே. 7.9

3638 வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,
எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்பொதும்,
மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,
பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே. 7.10

3639 சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,
அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்
விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே. 7.11

3640 கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான்
ஒருவன் அடியே னுள்ளானே. 8.1

3641 அடியே னுள்ளான் உடலுள்ளான்
அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம்,
படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை
இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வி லும்ப ரொருவனே. 8.2

3652 உணர்வி லும்ப ரொருவனை
அவன தருளா லுறல்பொருட்டு,என்
உணர்வி னுள்ளே யிருத்தினேன்
அதுவும் அவன தின்னருளே,
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெறவூர்ந் திறவேறி
யானும் தானா யொழிந்தானே. 8.3

3643 யானும் தானா யொழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே. 8.4

3644 நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக்
கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா
துணர்ந்தும் மேலும் காண்பரிது
சென்று சென்று பரம்பரமாய்
யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே. 8.5

3645 நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே. 8.6

3646 அதுவே வீடு வீடு
பேற்றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி
யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடு
பேற்றின்பந் தானும் அதுதேறாது,
எதுவே வீடே தின்பம்? என்
றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே. 8.7

3647 எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென்
றில்லாத் தாரும் புறத்தாரும்
மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம்
போகும் போது,உன் மத்தர்போல்
பித்தே யேறி யனுராகம்
பொழியும் போதெம் பெம்மானோடு
ஒத்தே சென்று,அங் குளம்கூடக்
கூடிற் றாகில் நல்லுறைப்பே. 8.8

3648 கூடிற் றாகில் நல்லுறைப்புக்
கூடா மையைக் கூடினால்,
ஆடல் பறவை யுயர்கொடியெம்
ஆய னாவ ததுவதுவே,
வீடைப் பண்ணி யொருபரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,
ஓடித் திரியும் யோகிகளும்
உளரு மில்லை யல்லரே. 8.9

3649 உளரு மில்லை யல்லராய்
உளரா யில்லை யாகியே,
உளரெம் மொருவர் அவர்வந்தென்
உள்ளத் துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும்
போல் அசைவும் ஆக்கமும்,
வளரும் சுடரும் இருளும்போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே. 8.10

3650 தெருளும் மருளும் மாய்த்துத்தன்
திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம்
அண்ணல் கருமா ணிக்கமே. 8.11

3651 கருமா ணிக்க மலைமேல்மணித்
தடந்தாமரைக் காடுகள்போல்,
திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை
யாடைகள் செய்யபிரான்
திருமா லெம்மான் செழுநீர்வயல்
குட்டநாட்டுத் திருப்புலியூர்,
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீரிதற் கென்செய்கேனா. 9.1

3652 அன்னைமீ ரிதற்கென் செய்கேன்?
அணிமேருவின் மீதுலவும்,
துன்னு சூழ்சுடர் ஞாயிறும்
அன்றியும்பல் சுடர்களும்போல்,
மின்னு நீண்முடி யாரம்பல்கலன்
றானுடை யெம்பெருமான்,
புன்னை யம்பொழில் சூழ்திருப்
புலியூர் புகழுமிவளே. 9.2

3653 புகழு மிவள்நின் றிராப்பகல்
பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்
திகழு மெரியோடு செல்வதொப்பச்
செழுங்கதி ராழிமுதல்
புகழும் பொருபடை யேந்திப்போர்
புக்கசுரரைப் பொன்றுவித்தான்
திகழு மணிநெடு மாடம்நீடு
திருப்பூலி யுர்வளமே. 9.3

3654 ஊர்வ ளம்கிளர் சோலையும்
கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து
ஏர்வ ளம்கிளர் தண்பணைக்
குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
சீர்வ ளம்கிளர் மூவுல
குண்டுமிழ் தேவபிரான்,
பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்
பேச்சிலளின்றிப் புனையிழையே. 9.4

3655 புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,
நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,
சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,
முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ்கினளே. 9.5

3656 திருவருள் மூழ்கி வைகளும் செழுநீர்நிறக் கண்ணபிரான்,
திருவருள் களும்சேர்ந் தமைக்கடை யாளம் திருந்தவுள,
திருவருள் அருளால் அவன்fசென்று சேர்தண் திருப்பூலியுர்,
திருவருள் கமுகொண் பழத்தது மெல்லியல் செவ்விதழே. 9.6

3657 மெல்லிலைச் செல்வண் கொடிபுல்க வீங்கிளந் தாள்கமுகின்,
மல்லிலை மடல்வாழை யீங்கனி சூழ்ந்து மணம்கமழ்ந்து,
புல்லிலைத் தெங்கி னூடுகால் உலவும்தண் திருப்பூலியுர்,
மல்லலம் செல்வக் கண்ணந்தாள் அடைந்தாள் இம் மடவரலே. 9.7

3658 மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச்
சொல்லுகேன்? மல்லைச்செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள்
நெய்யழல் வான்புகைபோய்
திடவிசும் பிலமரர் நாட்டை
மறைக்கும்தண் திருப்பூலியுர்,
படவர வணையான் றன்நாமம்
அல்லால் பரவா ளிவளே. 9.8

3659 பரவா ளிவள்நின் றிராப்பகல்
பனிநீர்நிறக் கண்ணபிரான்,
விரவா ரிசைமறை வேதியரொலி
வேலையின் நின்றொலிப்ப,
கரவார் தடந்தொறும் தாமரைக்
கயந்தீவிகை நின்றலரும்,
புரவார் கழனிகள் சூழ்திருப்
புலியூர்ப்புக ழன்றிமற்றே. 9.9

3660 அன்றிமற் றோருபாய மென்னிவ
ளந்தண்டு ழாய்கமழ்தல்,
குன்ற மாமணி மாடமாளிகைக்
கோலக்கு ழாங்கள்மல்கி,
தென்தி சைத்தில தம்புரைக்
குட்டநாட்டுத் திருப்பூலியுர்,
நின்ற மாயப்பி ராந்திரு
வருளாமிவள் நேர்ப்பட்டதே. 9.10

3661 நேர்ப்பட்ட நிறைமூ வுலகுக்கும்
நாயகன் றன்னடிமை,
நேர்ப்பட்ட தொண்டர்தொண்டர்
தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல்
நேர்ப்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள்
இவையு மோர்பத்தும்
நேர்ப்பட் டாரவர், நேர்ப்பட்டார்
நெடுமாற்கடி மைசெய்யவே. 9.11

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3662 நெடுமாற் கடிமை செய்வேன்போல்
அவனை கருத வஞ்சித்து,
தடுமாற் றற்ற தீக்கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்,
கொடுமா வினையேன் அவனடியார்
அடியே கூடும் இதுவல்லால்,
விடுமா றென்ப தென்னந்தோ.
வியன்மூ வுலகு பெறினுமே? 10.1

3663 வியன்மூ வுலகு பெறினும்போய்த்
தானே தானே யானாலும்,
புயல்மே கம்போல் திருமேனி
அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,
சயமே யடிமை தலைநின்றார்
திருத்தாள் வணங்கி, இம்மையே
பயனே யின்பம் யான்பெற்ற
துறுமோ பாவி யேனுக்கே? 10.2

3664 உறுமோ பாவி யேனுக்கிவ்
வுலகம் மூன்றும் உடன்நிறைய,
சிறுமா மேனி நிமிர்த்தவென்
செந்தா மரைக்கண் திருக்குறளன்
நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவனடியார்,
சிறுமா மனிச ராயென்னை
ஆண்டா ரிங்கே திரியவே. 10.3

3665 இங்கே திரிந்தேற் கிழக்குற்றென்.
இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,
செங்கோ லத்த பவளவாய்ச்
செந்தா மரைக்க ணென்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்
புலன்கொள் வடிவென் மனத்தாய்
அங்கேய் மலர்கள் கையவாய்
வழிபட் டோ ட அருளிலே? 10.4

3666 வழிபட் டோ ட அருள்பெற்று
மாயன் கோல மலரடிக்கீழ்,
சுழிபட் டோ டும் சுடர்ச்சோதி
வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,
இழிபட் டோ டும் உடலினிற்
பிறந்து தன்fசீர் யான்கற்று,
மொழிபட் டோ டும் கவியமுத
நுகர்ச்சி யுறுமோ முழுதுமே? 10.5

3667 நுகர்ச்சி யுறுமோ மூவுலகின்
வீடு பேறு தன்கேழில்,
புகர்ச்செம் முகத்த களிறட்ட
பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள்
நீண்ட அசுர ருயிரெல்லாம்,
தகர்த்துண் டுழலும் புட்பாகன்
பெரிய தனிமாப் புகழே? 10.6

3668 தனிமாப் புகழே யெஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான்தோன்றி,
முனிமாப் பிரம முதல்வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த,
தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்
புகுதல் அன்றி அவனடியார்,
நனிமாக் கலவி யின்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே. 10.7

3669 நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்
தாளும் தோளும் முடிகளும்
சமனி லாத பலபரப்பி,
நீளும் படர்பூங் கற்பகக்
காவும் நிறைபன் னாயிற்றின்,
கோளு முடைய மணிமலைபோல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே. 10.8

3670 தமர்கள் கூட்ட வல்வினையை
நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,
அமர்கொள் ஆழி சங்குவாள்
வில்தண் டாதி பல்படையன்,
குமரன் கோல ஐங்கணைவேள்
தாதை கோதில் அடியார்தம்.
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே. 10.9

3671 வாய்க்க தமியேற் கூழிதோ
றூழி யூழி மாகாயாம்
பூக்கொள் மேனி நான்குதோள்
பொன்னா ழிக்கை யென்னம்மான்,
நீக்க மில்லா அடியார்தம்
அடியார் அடியார் அடியாரெங்
கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்
செல்லும் நல்ல கோட்பாடே. 10.10

3672 நல்ல கோட்பாட் டுலகங்கள்
மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
சொல்லப் பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
நல்ல பதத்தால் மனைவாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே. 10.11