திருவாய் மொழி ஐந்தாம் பத்து

3233 கையார் சக்கரத்தெங்கருமாணிக்க மே. என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான். அறையோ இனிப்போனாலே. 1.1

3234 போனாய் மாமருதின் நடுவேயென்பொல் லாமணியே,
தேனே. இன்னமுதே. என்றென்றேசில கூற்றுச்சொல்ல,
தானே லெம்பெருமானவனென்னா கியொழிந்தான்,
வானே மாநிலமேமற்றுமுற்றுமென் னுள்ளனவே. 1.2

3235 உள்ளன மற்றுளவாப்புறமேசில மாயஞ்சொல்லி,
வள்ளல் மணிவண்ணனே. என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,
கள்ளம னம்தவிர்ந்தேயுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்,
வெள்ளத் தணைக்கிடந்தாயினியுன்னைவிட் டெங்கொள்வனே? 1.3

3236 என்கொள்வ னுன்னைவிட்டென்
னும்வாசகங் கள்சொல்லியும்,
வன்கள்வ னேன்மனத்தை
வலித்துக்கண்ண நீர் கரந்து,
நின்கண் நெருங்கவைத்தே
என்தாவியை நீக்ககில்லேன்,
என்கண் மலினமறுத்
தென்னைக்கூவி யருளாய்கண்ணனே. 1.4

3237 கண்ணபி ரானைவிண்ணோர்
கருமாணிக்கத் தையமுதை,
நண்ணியும் நண்ணகில்லேன்
நடுவேயோ ருடம்பிலிட்டு,
திண்ண மழுந்தக்கட்டிப்
பலசெய்வினை வன்கயிற்றால்,
புண்ணை மறையவரிந்
தெனைப்போரவைத் தாய்புறமே. 1.5

3238 புறமறக் கட்டிக்கொண்டிரு
வல்வினை யார்குமைக்கும்,
முறைமுறை யாக்கைபுகலொழியக்
கண்டு கொண்டொழிந்தேன்,
நிறமுடை நால்தடந்தோள்
செய்யவாய்செய்ய தாமரைக்கண்,
அறமுய லாழியங்கைக்
கருமேனியம் மான்தன்னையே. 1.6

3239 அம்மா னாழிப்பிரான் அவனெவ்விடத் தான்?யானார்?,
எம்மா பாவியர்க்கும்விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,
கைம்மா துன்பொழித்தாய். என்றுகைதலை பூசலிட்டே,
மெய்ம்மா லாயொழிந்தேனெம்பிரானுமென் மேலானே. 1.7

3240 மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும்,
மாலார் வந்தினநாள் அடியேன்மனத்தே மன்னினார்,
சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும்,
மேலாத் தாய்தந்தையும் அவரேயினி யாவாரே. 1.8

3241 ஆவா ரார்துணையென்றலைநீர்க்கட லுளழுந்தும்
நாவாய் போல்,பிறவிக் கடலுள்நின்று நான்துளங்க,
தேவார் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும்,
ஆவா வென்றருள் செய்தடியேனொடு மானானே. 1.9

3242 ஆனான் ஆளுடையானென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய்தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே. 1.10

3243 கார்வண்ணன் கண்ணபிரான் கமலத்தடங் கண்ணன்தன்னை,
ஏர்வள வொண்கழனிக்குருகூர்ச்சட கோபன்சொன்ன,
சீர்வண்ண வொண் தமிழ்களிவையாயிரத் துளிப்பத்தும்
ஆர்வண்ணத் தாலுரைப்பார் அடிக்கீழ்புகு வார்பொலிந்தே. 1.11

3244 பொலிக பொலிக பொலிக.
போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோ ம். 2.1

3245 கண்டோ ம் கண்டோ ம் கண்டோ ம்
கண்ணுக் கினியன கண்டோ ம்,
தொண்டீர். எல்லீரும் வாரீர்
தொழுது தொழுதுநின் றார்த்தும்,
வண்டார் தண்ணந்து ழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்,
பண்டான் பாடிநின் றாடிப்
பரந்து திரிகின் றனவே. 2.2

3246 திரியும் கலியுகம் நீங்கித்
தேவர்கள் தாமும் புகுந்து,
பெரிய கிதயுகம் பற்றிப்
பேரின்ப வெள்ளம் பெருக,
கரிய முகில்வண்ண னெம்மான்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
இரியப் புகுந்திசை பாடி
எங்கும் இடங்கொண் டனவே. 2.3

3247 இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல,
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்க ளேயாய்
கிடந்தும் இருந்தும் எழுந்தும்
கீதம் பலபல பாடி,
நடந்தும் பறந்தும் குனித்தும்
நாடகம் செய்கின் றனவே. 2.4

3248 செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே
ஒக்கின்ற திவ்வுல கத்து,
வைகுந்தன் பூதங்க ளேயாய்
மாயத்தி னாலெங்கும் மன்னி,
ஐயமொன் றில்லை யரக்கர்
அசுரர் பிறந்தீருள் ளீரேல்,
உய்யும் வகையில்லை தொண்டீர்.
ஊழி பெயர்த்திடும் கொன்றே. 2.5

3249 கொன்றுயி ருண்ணும் விசாதி
பகைபசி தீயன வெல்லாம்,
நின்றிவ் வுலகில் கடிவான்
நேமிப்பி ரான்தமர் போந்தார்,
நன்றிசை பாடியும் துள்ளி
யாடியும் ஞாலம் பரந்தார்,
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்.
சிந்தையைச் செந்நி றுத்தியே. 2.6

3250 நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்க ளும்மையுய் யக்கொள்
மறுத்து மவனோடே கண்டீர்
மார்க்கண் டேயனும் கரியே
கறுத்த மனமொன்றும் வேண்டா
கண்ணனல் லால்தெய்வ மில்லை,
இறுப்பதெல் லாமவன் மூர்த்தி
யாயவர்க் கேயி றுமினே. 2.7

3251 இறுக்கு மிறையிறுத்துண்ண
எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,
நிறுத்தினான் தெய்வங்க ளாக
அத்தெய்வ நாயகன் றானே
மறுத்திரு மார்வன் அவன்றன்
பூதங்கள் கீதங்கள் பாடி,
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்
மேவித் தொழுதுய்ம்மி னீரே. 2.8

3252 மேவித் தொழுதுய்ம்மி னீர்கள்
வேதப் புனித இருக்கை,
நாவிற்கொண் டச்சுதன் றன்னை
ஞான விதிபிழை யாமே,
பூவில் புகையும் விளக்கும்
சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழுமடி யாரும்
பகவரும் மிக்க துலகே. 2.9

3253 மிக்க வுலகுகள் தோறும்
மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,
நக்கபி ரானோ டயனும்
இந்திர னும்முதலாக,
தொக்க அமரர் குழாங்கள்
எங்கும் பரந்தன தொண்டீர்,
ஒக்கத் தொழுகிற்றி ராகில்
கலியுக மொன்றுமில் லையே. 2.10

3254 கலியுக மொன்றுமின் றிக்கே
தன்னடி யார்க்கருள் செய்யும்,
மலியும் சுடரொளி மூர்த்தி
மாயப்பி ரான்கண்ணன் றன்னை,
கலிவயல் தென்னன் குருகூர்க்
காரிமா றன்சட கோபன்,
ஒலிபுக ழாயிரத் திப்பத்து
உள்ளத்தை மாசறுக் கும்மே. 2.11

3255 மாசறு சோதியென் செய்ய வாய்மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை யாதி மூர்த்தியை நாடியே,
பாசற வெய்தி யறிவிழந் தெனைநா ளையம்?,
ஏசறு மூரவர் கவ்வை தோழீ. என்செய்யுமே? 3.1

3256 என்செய்யு மூரவர் கவ்வை தோழீ. இனிநம்மை,
என்செய்ய தாமரைக் கண்ண னென்னை நிறைகொண்டான்,
முன்செய்ய மாமை யிழந்து மேனி மெலிவெய்தி,
என்செய்ய வாயும் கருங்கண் ணும்பயப் பூர்ந்தவே. 3.2

3257 ஊர்ந்த சகடம் உதைத்தபாதத்தன், பேய்முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறைகொண்டான்,
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடன்றியோர் சொல்லிலேன்,
தீர்ந்தவென் தோழீ. என்செய்யு மூரவர் கவ்வையே? 3.3

3258 ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ. கடியனே. 3.4

3259 கடியன் கொடியன் நெடியமாலுல கங்கொண்ட
அடியன், அறிவரு மேனிமாயத்தன், ஆகிலும்
கொடியவென் னெஞ்சம் அவனென்றே கிடக்கு மெல்லே,
துடிகொ ளிடைமடத் தோழீ. அன்னையென் செய்யுமே? 3.5

3260 அன்னையென் செய்யிலென் ஊரென்
சொல்லிலென் தோழிமீர்,
என்னை யினியுமக் காசை
யில்லை யகப்பட்டேன்,
முன்னை யமரர் முதல்வன்
வண்துவ ராபதி
மன்னன், மணிவண் ணன்வாசு
தேவன் வலையுளே. 3.6

3261 வலையுள் அகப்பட்டுத் தென்னைநன்
நெஞ்சம் கூவிக்கொண்டு,
அலைகடல் பள்ளி யம்மானை
ஆழிப் பிரான்தன்னை
கலைகொள் அகலல்குல் தோழீ.
நம்கண்க ளால்கண்டு
தலையில் வணங்க மாங்கொலோ
தையலார் முன்பே? 3.7

3262 பேய்முலை யுண்டு சகடம் பாய்ந்து மருதிடைப்
போய்முதல் சாய்த்து, புள்வாய் பிளந்து களிறட்ட,
தூமுறு வல்தொண்டை, வாய்ப்பிரானையெந் நாள்கொலோ,
யாமுறு கின்றது தோழீ. அன்னையர் நாணவே? 3.8

3263 நாணும் நிறையும் கவர்ந்தென்னை
நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,
சேணுயர் வானத் திருக்கும்
தேவ பிரான்தன்னை,
ஆணையென் தோழீ. உலகு
தோறலர் தூற்றி,ஆம்
கோணைகள் செய்து
குதிரியாய் மடலூர்துமே. 3.9

3264 யாமட லூர்ந்தும் எம்மாழியங்கைப் பிரானுடை,
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,
யாமட மின்றித் தெருவு தோறயல் தையலார்,
நாமடங் கப்பழி தூற்றி நாடும் இரைக்கவே. 3.10

3265 இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான்தன்னை,
விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,
நிரைக்கொளந் தாதி யோரா யிரத்து ளிப்பத்தும்,
உரைக்கவல் லார்க்கு வைகுந்த மாகும்தம் மூரெல்லாம். 3.11

3266 ஊரெல்லாம் துஞ்சி யுலகெல்லாம் நள்ளிருளாய்,
நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால்,
பாரெல்லா முண்டநம் பாம்பணையான் வாரானால்,
ஆரெல்லே. வல்வினையேன் ஆவிகாப் பாரினையே? 4.1

3267 ஆவிகாப் பாரினியார்? ஆழ்கடல்மண் விண்மூடி,
மாவிகார மாயோர் வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணனென் கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே. நீயும்பாங் கல்லையே? 4.2

3268 நீயும்பாங் கல்லைகாண் நெஞ்சமே. நீளிரவும்,
ஓயும் பொழுதின்றி யூழியாய் நீண்டதால்,
காயும் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால்,
மாயும் வகையறியேன் வல்வினையேன் பெண்பிறந்தே. 4.3

3269 பெண்பிறந்தார் எய்தும் பெருந்துயர்காண் கிலேனென்று,
ஒண்சுடரோன் வாரா தொளித்தான்,இம் மண்ணளந்த
கண்பெரிய செவ்வாயெங் காரேறு வாரானால்,
எண்பெரிய சிந்தைநோய் தீர்ப்பாரார் என்னையே? 4.4

3270 ஆரென்னை யாராய்வார்? அன்னையரும் தோழியரும்,
நீரென்னே? என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்,
காரன்ன மேனிநங் கண்ணனும் வாரானால்,
பேரென்னை மாயாதால் வல்வினையேன் பின்நின்றே. 4.5

3271 பின்நின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால்,
முன்நின் றிராவூழி கண்புதைய மூடிற்றால்,
மன்னின்ற சக்கரத்தெம் மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீளாவி காப்பாரார் இவ்விடத்தே? 4.6

3272 காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின் நுண்துளியாய்,
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்,
தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள். என்செய்கேன்? 4.7

3273 தெய்வங்காள். என்செய்கேன்?ஓரிரவேழ் ஊழியாய்,
மெய்வந்து நின்றென தாவி மெலிவிக்கும்
கைவந்த சக்கரதென் கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தானடுமே. 4.8

3274 வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்,
அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே. 4.9

3275 நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்,
சென்றுருகி நுண்துளியாய்ச்செல்கின்ற கங்குல்வாய்,
அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரானென்று,
ஒன்றொருகால் சொல்லாதுலகோ உறங்குமே. 4.10

3276 உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை,
சிறந்தபொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொல்,
நிறங்கிளர்ந்த அந்தாதி யாயிரத்து ளிப்பத்தால்,
இறந்துபோய் வைகுந்தம் சேராவா றெங்ஙனேயோ? 4.11

3277 எங்ஙனேயோ அன்னை மீர்காள்.
என்னை முனிவதுநீர்?,
நங்கள்கோலத் திருக் குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
சங்கினோடும் நேமி யோடும்
தாமரைக் கண்களொடும்,
செங்கனிவா யொன்றி னொடும்
செல்கின்ற தென்நெஞ்சமே. 5.1

3278 என்நெஞ்சி னால்நோக்கிக் காணீர்
என்னை முனியாதே,
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்
மின்னும் நூலும் குண்டலமும்
மார்வில் திருமறுவும்,
மன்னும் பூணும் நான்குதோளும்
வந்தெங்கும் நின்றிடுமே. 5.2

3279 நின்றிடும் திசைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
வென்றி வில்லும் தண்டும்
வாளும் சக்கரமும்சங்கமும்,
நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா
நெஞ்சுள்ளும் நீங்காவே. 5.3

3280 நீங்கநில்லாக் கண்ண நீர்களென்று
அன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
பூந்தண் மாலைத் தண்டுழாயும்
பொன்முடி யும்வடிவும்,
பாங்கு தோன்றும் பட்டும்நாணும்
பாவியேன் பக்கத்தவே. 5.4

3281 பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
தக்ககீர்த்திக் திருக்கு றுங்குடி
நம்பியை நான்கண்டபின்
தொக்கசோதித் தொண்டை வாயும்
நீண்ட புருவங்களும்,
தக்கதாமரைக் கண்ணும் பாவியேf
னாவியின் மேலனவே. 5.5

3282 மேலும் வன்பழி நங்குடிக்கிவள்
என்றன்னை காணக்கொடாள்
சோலைசூழ் தண்திருக் குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
கோலநீள் கொடிமூக்கும் தாமரைக்
கண்ணும் கனிவாயும்,
நீலமேனியும் நான்கு தோளுமென்
நெஞ்சம் நிறைந்தனவே. 5.6

3283 நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்
என்றன்னை காணக்கொடாள்
சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த
நீண்டபொன் மேனியொடும்
நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்
நேமியங் கையுளதே. 5.7

3284 கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன்னிற்குமே. 5.8

3285 முன்னின் றாயென்று தோழிமார்களும்
அன்னைய ரும்முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
சென்னி நீண்முடி யாதியாய
உலப்பி லணிகலத்தன்,
கன்னல் பாலமு தாகிவந்தென்
நெஞ்சம் கழியானே. 5.9

3286 கழியமிக்கதோர் காதல ளிவளென்
றன்னை காணக்கொடாள்,
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
குழுமித் தேவர் குழாங்கள்தொழச்
சோதிவெள் ளத்தினுள்ளே,
எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழும்
ஆர்க்கு மறிவரிதே. 5.10

3287 அறிவரிய பிரானை யாழியங்கையனை யேயலற்றி,
நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன் சொன்ன,
குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும் திருக்குறுங் குடியதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்டணவராழ்கடல் ஞாலத்துள்ளே. 5.11

3288 கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல்ஞாலம் முண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன்வந் தேறக் கொலோ?,
கடல்ஞா லத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கடல்ஞா லத்தென் மகள்கற் கின்றனவே? 6.1

3289 கற்கும்கல் விக்கெல்லை யிலனே என்னும்
கற்கும்கல்வி யாவேனும் யானே என்னும்,
கற்கும்கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும்கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
கற்கும்கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும்கல்வி நாதன்வன் தேறக் கொலோ?,
கற்கும் கல்வியீர்க் கிவையென் சொல்லுகேன்
கற்கும் கல்வியென் மகள்காண் கின்றனவே? 6.2

3290 காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?
காண்கின்ற வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றனவே? 6.3

3291 செய்கின்ற கிதியெல்லாம் யானே என்னும்
செய்வானின் றனகளும் யானே என்னும்,
செய்துமுன் னிறந்தனவும் யானே என்னும்
செய்கைப்பய னுண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்யகம லக்கண்ண னேறக் கொலோ?
செய்யவுல கத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
செய்ய கனிவா யிளமான் திறத்தே? 6.4

3292 திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே? 6.5

3293 இனவேய்மலை யேந்தினேன் யானே என்னும்
இனவேறுகள் செற்றேனும் யானே என்னும்,
இனவான்கன்று மேய்த்தேனும் யானே என்னும்
இனவாநிரை காத்தேனும் யானே என்னும்,
இனவாயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன்வந் தேறக் கொலோ?,
இனவேற்கண் நல்லீர்க் கிவையென் சொல்லுகேன்
இனவேற் கண்ணி யென்மக ளுற்றனவே? 6.6

3294 உற்றார்க ளெனக்கில்லை யாரும் என்னும்
உற்றார்க ளெனக்கிங்கெல் லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக் குற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்தேறக் கொலோ?,
உற்றீர்கட் கென்சொல்லிச் சொல்லு கேன்யான்
உற்றென் னுடைப்பே தையுரைக் கின்றனவே? 6.7

3295 உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?,
உரைக்கின்ற உலகத் தீர்க்கென் சொல்லுகேன்
உரைக்கின்ற வென்கோ மளவொண் கொடிக்கே? 6.8

3296 கொடிய வினையாது மிலனே என்னும்
கொடியவினை யாவேனும் யானே என்னும்,
கொடியவினை செய்வேனும் யானே என்னும்
கொடியவினை தீர்ப்பேனும் யானே என்னும்,
கொடியா னிலங்கைசெற் றேனே என்னும்
கொடியபுள் ளுடையவ னேறக் கொலோ?,
கொடிய வுலகத்தீர்க் கிவையென் சொல்லுகேன்
கொடியேன் கொடியென் மகள்கோ லங்களே? 6.9

3297 கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்,
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலங்கொ ளுயிர்களும் யானே என்னும்,
கோலங்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலங்கொள் முகில்வண்ண னேறக் கொலோ?
கோலங்கொ ளுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
கோலந் திகழ்கோ தையென்கூந் தலுக்கே. 6.10

3298 கூந்தல்மலர் மங்கைக்கும் மண்மடந் தைக்கும்
குலவாயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி நாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றே வல்செய்து,
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
இவையுமோர் பத்தும்வல் லார்,உலகில்
ஏந்து பெருஞ்செல்வந் தாராய்த் திருமால்
அடியார் களைப்பூ சிக்கநோற் றார்களே. 6.11

3299 நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே. 7.1

3300 அங்குற்றே னல்லே னிங்குற்றே னல்லேன்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து,நான்
எங்குற் றேனுமல் லேனிலங்கைசெற்ற அம்மானே,
திங்கள் சேர்மணி மாடம் நீடு சிரீவர மங்கல நகருறை,
சங்கு சக்கரத் தாய்.தமி யேனுக் கருளாயே. 7.2

3301 கருள புட்கொடி சக்க ரப்படை
வான நாட.எங் கார்முகில் வண்ணா,
பொருளல் லாத என்னைப் பொருளாக்கி
அடிமை கொண்டாய்,
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்
சிரீவர மங்கலநகர்க்கு,
அருள்செய்தங்கிருந் தாயறி யேனொரு கைம்மாறே. 7.3

3302 மாறு சேர்படை நூற்றுவர் மங்க வோரைவர்க்கு
ஆயன்று மாயப்போர் பண்ணி,
நீறு செய்த எந்தாய். நிலங்கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச்
சிரீவர மங்கலநகர்,
ஏறிவீற் றிருந்தாய். உன்னை எங்கெய்தக் கூவுவனே? 7.4

3302 எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு?
எவ்வதெய் வத்து ளாயுமாய் நின்று,
கைத வங்கள்செய் யும்கரு மேனியம் மானே,
செய்த வேள்வியர் வையத் தேவரறாச்
சிரீவர மங்கலநகர்,
கைத்தொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே. 7.5

3304 ஏன மாய்நிலங் கீண்டவென் அப்பனே.
கண்ணா. என்று மென்னை யாளுடை,
வானநா யகனே. மணிமா ணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண்சிரீ வரமங்கலத்
தவர்க்கை தொழவுறை
வான மாமலை யே.அடி யேன்தொழ வந்தருளே. 7.6

3305 வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர்
கொழுந்தே, உலகுக்கோர்
முந்தைத் தாய்தந்தை யே.முழு ஏழுலகு முண்டாய்,
செந்தொ ழிலவர் வேத வேள்வியறாச்
சிரீவர மங்கலநகர்,
அந்தமில் புகழாய். அடியேனை அகற்றேலே. 7.7

3306 அகற்ற நீவைத்த மாயவல் லைம்புலங்களாம்
அவை நன்கறிந்தனன்,
அகற்றி என்னையும் நீஅருஞ் சேற்றில் வீழ்த்தி கண்டாய்,
பகற்கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கை
வாணனே, என்றும்
புகற்கரிய எந்தாய்.புள்ளின்வாய் பிளந்தானே. 7.8

3307 புள்ளின்வாய் பிளந்தாய். மருதிடை போயினாய்.
எருதேழ் அடர்த்த,என்
கள்ள மாயவனே.கருமாணிக்கச் சுடரே,
தெள்ளியார் திருநான் மறைகள் வல்லார்
மலிதண் சிரீவர மங்கை,
உள்ளிருந்த எந்தாய். அருளாய் உய்யுமா றெனக்கே. 7.9

3308 ஆறெ னக்குநின் பாதமே சரணாகத்
தந்தொழிந்தாய், உனக் கோர் கைம்
மாறு நானொன் றிலேனென தாவியு முனதே,
சேரு கொள்கரும் பும்பெருஞ் செந்நெல்லும்
மலிதண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய்முடி யாய்.தெய்வ நாயகனே. 7.10

3309 தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணைமிசை,
கொய்கொள் பூம்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்
செய்த ஆயிரத் துள்ளிவை தண்சிரீ வரமங்கை
மேய பத்துடன்,
வைகல் பாட வல்லார் வானோர்க் காரா அமுதே. 7.11

3310 ஆரா அமுதே. அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,
நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய். கண்டேன் எம்மானே. 8.1

3311 எம்மா னே.என் வெள்ளை மூர்த்தி. என்னை ஆள்வானே,
எம்மா வுருவும் வேண்டு மாற்றால் ஆவாய் எழிலேறே,
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்மலரும் திருக்குடந்தை,
அம்மா மலர்க்கண் வளர்கின் றானே.என்நான் செய்கேனே. 8.2

3312 என்நான் செய்கேன். யாரே களைகண்?
என்னையென் செய்கின்றாய்?
உன்னால் அல்லால் யாவ ராலும்
ஒன்றும் குறைவேண்டேன்,
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய்.
அடியேன் அருவாழ்ணாள்,
சென்னா ளெந்நாள். அந்நா ளுன்தாள்
பிடித்தே செலக்காணே. 8.3

3313 செலக்காண் கிற்பார் காணும் அளவும்
செல்லும் கீர்த்தியாய்,
உலப்பி லானே. எல்லா வுலகும்
உடைய ஒருமூர்த்தி,
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்.
உன்னைக் காண்பான்நான்
அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி
அழுவன் தொழுவனே. 8.4

3314 அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்
பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி
நாணிக் கவிழ்ந்திருப்பன்,
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்.
செந்தா மரைக்கண்ணா,
தொழுவன் னேனை யுன்தாள் சேரும்
வகையே சூழ்கண்டாய். 8.5

3315 சூழ்கண் டாயென் தொல்லை வினையை
அறுத்துன் அடிசேரும்
ஊழ்கண் டிருந்தே, தூராக் குழிதூர்த்து
எனைநாள் அகன்றிருப்பன்?,
வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்.
வானோர் கோமானே,
யாழி னிசையே. அமுதே. அறிவின்
பயனே. அரியேறே. 8.6

3316 அரியே றே.என் அம்பொற் சுடரே.
செங்கட் கருமுகிலே,
எரியே. பவளக் குன்றே. நாற்றோள்
எந்தாய். உனதருளே,
பிரியா அடிமை யென்னைக் கொண்டாய்
குடந்தைத் திருமாலே,
தரியே னினியுன் சரணந் தந்தென்
சன்மம் களையாயே. 8.7

3317 களைவாய் துன்பம் களையா தொழிவாய்
களைகண் மற்றிலேன்,
வளைவாய் நேமிப் படையாய். குடந்தைக்
கிடந்த மாமாயா,
தளரா வுடலம் என்ன தாவி
சரிந்து போம்போது,
இளையா துனதாள் ஒருங்கப் பிடித்து
போத இசைநீயே. 8.8

3318 இசைவித் தென்னை யுன்தாள் இணைகீழ்
இருத்தும் அம்மானே,
அசைவில் அமரர் தலைவர் தலைவா
ஆதி பெருமூர்த்தி,
திசைவில் வீசும் செழுமா மணிகள்
சேரும் திருக்குடந்தை,
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்.
காண வாராயே. 8.9

3319 வாரா வருவாய் வருமென் மாயா. மாயா மூர்த்தியாய்,
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய். திருக்குடந்தை
ஊராய்.உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? 8.10

3320 உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு
அவளை யுயிருண்டான்,
கழல்கள் அவையே சரணாக் கொண்ட
குருகூர்ச் சடகோபன்,
குழலில் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே. 8.11

3321 மானேய் நோக்குநல்லீர். வைகலும்வினை யேன்மெலிய,
வானார் வண்கமுகும் மதுமல்லிகை யுங்கமழும்,
தேனார் சோலைகள்சூழ் திருவல்ல வாழுறையும்
கோனா ரை,அடியேண் அடிகூடுவ தென்றுகொலோ? 9.1

3322 என்றுகொல் தோழிமீர்காளெம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பொன்திகழ் புன்னைமகிழ் புதுமாதவி மீதணவி,
தென்றல் மணங்கமழும் திருவல்ல வாழ்நகருள்
நின்றபி ரான்,அடிநீ றடியோங்கொண்டு சூடுவதே? 9.2

3323 சூடும் மலர்க்குழலீர். துயராட்டியே னைமெலிய,
பாடுநல் வேதவொலி பரவைத்திரை போல்முழங்க,
மாடுயர்ந் தோமப்புகை கமழும்தண் திருவல்லவாழ்
நீடுறை கின்றபிரான் கழல்கண்டுங்கொல் நிச்சலுமே? 9.3

3324 நிச்சலும் தோழிமீர்காள். எம்மைநீர்நலிந் தென்செய்தீரோ?
பச்சிலை நீள்கமுகும் பலவும்தெங்கும் வாழைகளும்,
மச்சணி மாடங்கள்மீ தணவும்தண் திருவல்லவாழ்
நச்சர வினணைமேல் நம்பிரானது நன்னலமே. 9.4

3325 நன்னலத் தோழிமீர்காள். நல்லவந்தணர் வேள்விப்புகை,
மைந்நலங் கொண்டுயர்விண் மறைக்கும்தண் திருவல்லவாழ்,
கன்னலங் கட்டிதன்னைக் கனியையின் னமுதந்தன்னை,
என்னலங் கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே? 9.5

3326 காண்பதெஞ் ஞான்றுகொலொ வினையேன்கனி வாய்மடவீர்,
பாண்குரல் வண்டினோடு பசுந்தென்றலு மாகியெங்கும்,
சேண்சினை யோங்குமரச் செழுங்கானல் திருவல்லவாழ்,
மாண்குறள் கோலப்பிரான் மலர்த்தாமரைப் பாதங்களே? 9.6

3327 பாதங்கள் மேலணிபூத் தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,
ஓதநெ டுந்தடத்துள் உயர்தாமரை செங்கழுநீர்,
மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,
நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான்தன்னை நாடோ றுமே? 9.7

3328 நாடொறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் நன்னுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும் விளைசெந்நெலு மாகியெங்கும்,
மாடுறு பூந்தடஞ்சேர் வயல்சூழ்தண் திருவல்லவாழ்,
நீடுறை கின்றபிரான் நிலந்தாவிய நீள்கழலே? 9.8

3329 கழல்வளை பூரிப்பயாம் கண்டுகைதொழக் கூடுங்கொலோ,
குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி,
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்,
சுழலின் மலிசக்கரப் பெருமானது தொல்லருளே? 9.9

3330 தொல்லருள் நல்வினையால் சொல்லக்கூடுங்கொல்
தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,
நல்லரு ளாயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே? 9.10

3331 நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல்,
சேமங்கொள் தென்குருகூர்ச்சடகோபன் தெரிந்துரைத்த,
நாமங்க ளாயிரத்துள் இவைபத்தும் திருவல்லவாழ்,
சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார்சிறந் தார்பிறந்தே. 9.11

3332 பிறந்த வாறும் வளர்ந்த வாறும்
பெரிய பாரதம் கைசெய்து, ஐவர்க்குத்
திறங்கள் சாட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்,
நிறந்த னூடுபுக் கெனதாவியை நின்றுநின்று
உருக்கி யுண்கின்ற,இச்
சிறந்த வான்சுட ரே.உன்னை யென்றுகொல் சேர்வதுவே. 10.1

3333 வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்
மாய மாவினை வாய்பி ளந்ததும்
மதுவைவார் குழலார் குரவை பிணைந்த குழகும்,
அதுவிது உதுவென்ன லாவன வல்ல
என்னையுன் செய்கை நைவிக்கும்,
முதுவைய முதல்வா.உன்னை யென்று தலைப் பெய்வனே? 10.2

3334 பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்ட
பிள்ளைத் தேற்றமும், பேர்ந்தோர் சாடிறச்
செய்ய பாதமொன் றால்செய்த நின்சிறுச் சேவகமும்,
நெய்யுண் வார்த்தையுள், அன்னை கோல்கொள்ள
நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்க,
பையவே நிலையும் வந்தென் னெஞ்சை யுருக்குங்களே. 10.3

3335 கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க
வாறும், கலந்தசுரரை
உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,
வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை
விளங்க நின்றதும்,
உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே. 10.4

3336 உண்ண வானவர் கோனுக் காயர்
ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,
வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,
மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து
மணந்த மாயங்கள்,
எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்
மெழு கொக்குநின்றே. 10.5

3337 நின்ற வாறு மிருந்த வாறும்
கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா வுருவாய் அருவாயநின் மாயங்கள்,
நின்று நின்று நினைக்கின் றேனுன்னை
எங்ங னம்நினை கிற்பன், பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலக முண்ட ஒண்சுடரே. 10.6

3338 ஒண்சுடரோ டிருளுமாய் நின்ற வாறும்
உண்மையோ டின்மையாய் வந்து,என்
கண்கொ ளாவகை நீகரந் தென்னைச் செய்கின்றன,
எண்கொள் சிந்தையுள் நைகின்றேனென் கரிய
மாணிக்க மே.என் கண்கட்குத்
திண்கொள்ள வொருநாள் அருளாயுன் திருவுருவே. 10.7

3339 திருவுருவு கிடந்த வாறும் கொப்பூழ்ச்
செந்தா மரைமேல், திசைமுகன்
கருவுள்வீற் றிருந்து படைத்திட்ட கருமங்களும்,
பொருவி லுந்தனி நாயகமவை கேட்குந்
தோறுமென் னெஞ்சம் நின்று நெக்கு,
அருவி சோரும் கண்ணீ ரென்செய்கேன் அடியேனே. 10.8

3340 அடியை மூன்றை யிரந்த வாறும் அங்கேநின்றாம்
கடலும் மண்ணும் விண்ணும்
முடிய, ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்,
நொடியு மாறவை கேட்குந் தோறுமென்
நெஞ்சம் நின்தனக் கேக ரைந்துகும்,
கொடியவல் வினையேன் உன்னை யென்றுகொல் கூடுவதே? 10.9

3341 கூடி நீரை கடைந்த வாறும்
அமுதம் தேவர் உண்ண, அசுரரை
வீடும் வண்ணங்க ளேசெய்து போன வித்தகமும்,
ஊடு புக்கென தாவியை யுருக்கி
யுண்டிடு கின்ற, நின்தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சுநா கணையானே. 10.10

3342 நாகணைமிசை நம்பிரான் சரணே
சரண் நமக் கென்று, நாடொறும்
ஏக சிந்தைய னாய்க்குரு கூர்ச்சட கோபன் மாறன்,
ஆக நூற்ற அந் தாதி யாயிரத்துள்
இவையுமோர் பத்தும் வல்லார்,
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர் வைகலுமே. 10.11