நான்காம் பத்து

1248 போதலர்ந்த பொழில்சோலைப்
புறமெங்கும் பொருதிரைகள்
தாதுதிர வந்தலைக்கும்
தடமண்ணித் தென்கரைமேல்
மாதவன்றா னுறையுமிடம்
வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும்
திருத்தேவ னார்தொகையே
1.1

1249 யாவருமா யாவையுமா
யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய
மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை
வென்றிகொள்வார் மன்னுநாங்கை
தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
திருத்தேவ னார்தொகையே
1.2

1250 வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்
தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே 1.3

1251 இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,
எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே 1.4

1252 அண்டமுமிவ் வலைகடலு மவனிகளும் குலவரையும்
உண்டபிரா னுறையுமிடம் ஓளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே 1.5

1253 ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும்
பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்
சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே 1.6

1254 ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே 1.7

1255 வாராரு மிளங்கொங்கை மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த தனிக்காளை கருதுமிடம்
ஏராரும் பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சீராரும் மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே 1.8

1256 கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவிழ
கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே 1.9

1257 காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்
கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்
எரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே 1.10

1258 கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு
அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி
சூதகம் வாழைகள்சூழ்
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.1

1259 பல்ல வந்திகழ் பூங்கடம் பேறியக்
காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த
உம்பர்க்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.2

1260 அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன்
உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.3

1261 பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன்
பாகனைச் சாடிப்புக்கு,
ஒறுங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை
உதைத்தவ னுறைகோயில்,
கரும்பினூடுயர் சாலிகள் விளைதரு
கழனியில் மலிவாவி
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.4

1262 சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்
படையொடுங் கிளையோடும்
ஓட வாணனை யாயிரந் தோள்களும்
துணித்தவ னுறைகோயில்,
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்
பகலவ னொளிமறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.5

1263 அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய
கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.6

1264 உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய
அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினோ
டெழில்கொள்பந் தடிப்போர்,கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.7

1265 வாளை யார்தடந் கண்ணுமை பங்கன்வன்
சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம்
முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வன்
பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.8

1266 இந்து வார்சடை யீசனைப் பயந்தநான்
முகனைத்தன் னெழிலாரும்
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்
உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி _கர்ந்துதன்
குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
வண்புரு டோத்தமமே
2.9

1267 மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்
ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப்
பத்தும்வல் லார்,உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
ரோடும் கூடுவரே
2.10

1268 பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும்
பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு
மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே
3.1

1269 பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப்
பேதியா வின்பவெள் ளத்தை,
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை
ஏழிசை யின்சுவை தன்னை,
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக்
கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே
3.2

1270 திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை,
பங்கயத் தயனவ னனைய,
திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே
3.3

1271 வசையறு குறளாய் மாவலி வேள்வி
மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க
அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே
3.4

1272 தீமனத் தரக்கர் திறலழித் தவனே.
என்றுசென் றடைந்தவர் தமக்கு,
தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும்
தயரதன் மதலையைச் சயமே,
தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன்
கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே
3.5

1273 மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே
3.6

1274 வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும்
வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,
கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக்
கருமுகில் திருநிறத் தவனை,
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக்
கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே
3.7

1275 அன்றிய வாண னாயிரம் தோளும்
துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே
3.8

1276 களங்கனி வண்ணா. கண்ணணே. என்றன்
கார்முகி லே என நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள்
உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே
3.9

1277 தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்
மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
வானவ ராகுவர் மகிழ்ந்தே
3.10

1278 மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும்
மற்றவர்தம் காதலிமார்குழையும், தந்தை
கால்தளையு முடன்கழல வந்து தோன்றிக்
கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,
நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத்
திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,
சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.1

1279 பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவு கொண்ட
பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,
பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,
நெல்தொடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல்
இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.2

1280 படலடைந்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்
பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,
அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி
அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,
மடலெடுத்த நெடுன்தெங்கின் பழங்கல் வீழ
மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி,
திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.3

1281 வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி
வளைமருப்பிற் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த,
காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட
கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர்,
ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும்
எழில்மதியைக் கால்தொடா விளங்கு சோதி,
சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.4

1282 கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை
கதி ர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,
முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப
மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி
கண்டீர், மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி
ஆடவரை மடமொழியார் முகத்து இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.5


1283 தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன்
அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன
இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார்
மரகதம் போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த்
திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.6

1284 பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்
பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்
மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு மண்ணகலம்
குறையிரந்த மைந்தன் கண்டீர்,
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த
குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.7

1285 சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்
குலுங்க, நில மடந்தைதனை யிடந்து புல்கிக்
கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,
இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும்
ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,
சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.8

1286 ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி
எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்
மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம்
முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர்,
ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத்
தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர்,
சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே
4.9

1287 சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருதெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை,
கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன்
கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி
பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,
சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச்
சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே
4.10

1288 தூம்புடைப் பனைக்கை வேழம்
துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக்
கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும்
புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே
5.1

1289 கவ்வைவா ளெயிற்று வன்பேய்க்
கதிர்முலை சுவைத்து,இ லங்கை
வவ்விய இடும்பை தீரக்
கடுங்கணை துரந்த எந்தை,
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக்
குங்குமம் கழுவிப் போந்த,
தெய்வநீர் கமழும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே
5.2

1290 மாத்தொழில் மடங்கக் செற்று
மறுதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை
செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,
நாத்தொழில் மறைவல் லார்கள்
நயந்தறம் பயந்த வண்கைத்
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே
5.3

1291 தாங்கருஞ் சினத்து வன்தாள்
தடக்கைமா மருப்பு வாங்கி,
பூங்குருந் தொசித்துப் புள்வாய்
பிளந்தெரு தடர்த்த எந்தை,
மாங்கனி நுகர்ந்த மந்தி
வந்துவண் டிரிய வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தானே
5.4

1292 கருமக ளிலங்கை யாட்டி
பிலங்கொள்வாய் திறந்து தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும்
வாளினால் தடிந்த எந்தை,
பெருமகள் பேதை மங்கை
தன்னொடும் பிரிவி லாத,
திருமகள் மருவும் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தனே
5.5

1293 கெண்டையும் குறளும் புள்ளும்
கேழலு மரியும் மாவும்,
அண்டமும் சுடரும் அல்ல
ஆற்றலு மாய எந்தை,
ஓண்டிறல் தென்ன னோட
வடவர சோட்டங் கண்ட,
திண்டிற லாளர் நாங்கூர்த்
திருமணிக் கூடத் தனே
5.6

1294 குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே . 5.7

1295 சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி யோம்பும்,
பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களு மாய
வெந்தை, பங்கய முகுத்த தேறல் பருகிய வாளை பாய,
செங்கய லுகளும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே . 5.8

1296 பாவமும் அறமும் வீடும் இன்பமுந் துன்பந் தானும்
கோவமும் அருளும் அல்லாக் குணங்களு மாய எந்தை,
மூவரி லெங்கள் மூர்த்தி இவன், என முனிவரோடு,
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தனே . 5.9

1297 திங்கள்தோய் மாட நாங்கூர்த் திருமணிக் கூடத் தானை
மங்கையர் தலைவன் வண்தார்க் கலியன்வா யொலிகள் வல்லார்,
பொங்குநீ ருலக மாண்டு பொன்னுல காண்டு, பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோய் விளங்கு வாரே 5.10

1298 தாவளந் துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றிங் கேத்த நாகத்தின்
நடுக்கந்தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும்
மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே 6.1

1299 மண்ணிடந் தேன மாகி மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறையி ரந்தாய்
துண்ணென மாற்றார் தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 6.2

1300 உருத்தெழு வாலி மார்வில் ஓருகணை யுருவ வோட்டி,
கருத்துடைத் தம்பிக் கின்பக் கதிமுடி யரசளித்தாய்,
பருத்தெழு பலவும் மாவும் பழம்விழுந் தொழுகும் நாங்கைக்
கருத்தனே காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே 6.3

1301 முனைமகத் தரக்கன் மாள முடிகள்பத் தறுத்து வீழ்த்து, ஆங்
கனையவற் கிளைய வற்கே அரசளித் தருளி னானே,
சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்புதேன் நுகரும் நாங்கைக்,
கனைகழல் காவ ளந்தண் பாடியாய். களைக ணீயே 6.4

1302 படவர வுச்சி தன்மேல் பாய்ந்துபன்னடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 6.5

1303 மல்லரை யட்டு மாளக் கஞ்சனை மலைந்து கொன்று,
பல்லர சவிந்து வீழப் பாரதப் போர்மு டித்தாய்,
நல்லரண் காவின் நீழல் நறைகமழ் நாங்கை மேய,
கல்லரண் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 6.6

1304 மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களை கணீயே 6.7

1305 ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே 6.8

1306 சந்தமாய் சமய மாகிச் சமயவைம் பூத மாகி,
அந்தமா யாதி யாகி அருமறை யவையு மானாய்,
மந்தமார் பொழில்க டோறும் மடமயி லாலும் நாங்கை,
கந்தமார் காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே 6.9

1307 மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய கண்ணணைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக் குடைநிழல் பொலிவர் தாமே 6.10

1308 கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா, அடியே னிடரைக் களையாயே 7.1

1309 கொந்தார் துளவ மலர்கொன் டணிவானே,
நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர்,
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய், அடியே னிடரைக் களையாயே 7.2

1310 குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்
நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே 7.3

1311 கானார் கரிகொம் பதொசித்த களிறே,
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே 7.4

1312 வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக்குளத்தாய்,
பாடா வருவேன் விணையா யினபாற்றே 7.5

1313 கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,
எல்லா இடரும் கெடுமா றருளாயே 7.6

1314 கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே 7.7

1315 வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே, அடியேற் கருளாயே 7.8

1316 பூவார் திருமா மகள்புல் லியமார்பா,
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்
தேவா திருவெள்ளக் குளத்துறை வானே,
ஆவா அடியா னிவன், என் றருளாயே 7.9

1317 நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வன் திருவெள் ளக்குளத் துறைவானை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே 7.10

1318 கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும், காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி கொண்டகோனென் னானையென்றும்,
தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும்,
பவளவாயா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.1

1319 கஞ்சன்விட்ட வெஞ்சினத்த களிறடர்த்த காளையென்றும்,
வஞ்சமேவி வந்தபேயின் உயிரையுண்ட மாயனென்றும்,
செஞ்சொலாளர் நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பஞ்சியன்ன மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.2

1320 அண்டர்கோனென் னானையென்றும் ஆயர்மாதர் கொங்கைபுல்கு
செண்டனென்றும், நான்மறைகள் தேடியோடும் செல்வனென்றும்,
வண்டுலவு பொழில்கொள்நாங்கை மன்னுமாய னென்றென்றோதி,
பண்டுபோலன் றென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.3

1321 கொல்லையானாள் பரிசழிந்தாள் கோல்வளையார்
தம்முகப்பே, மல்லைமுன்னீர் தட்டிலங்கை கட்டழித்த மாயனென்றும்,
செல்வம்மல்கு மறையோர்நாங்கை தேவதேவ னென்றென்றோதி,
பல்வளையா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.4

1322 அரக்கராவி மாளவன்று ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,
குரக்கரச னென்றும்கோல வில்லியென்றும், மாமதியை
நெருக்குமாட நீடுநாங்கை நின்மலன்தா னென்றென்றோதி,
பரக்கழிந்தா ளென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.5

1323 ஞாலமுற்று முண்டுமிழிந்த நாதனென்றும், நானிலஞ்சூழ்
வேலையன்ன கோலமேனி வண்ணனென்றும், மேலெழுந்து
சேலுகளும் வயல்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பாலின்நல்ல மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.6

1324 நாடியென்ற னுள்ளொங்கொண்ட நாதனென்றும், நான்மறைகள்
தேடியென்றும் காணமாட்டாச் செல்வனென்றும், சிறைகொள்வண்டு
சேடுலவு பொழில்கொள்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பாடகம்சேர் மெல்லடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.7

1325 உலகமேத்து மொருவனென்றும் ஒண்சுடரோ டும்பரெய்தா,
நிலவுமாழிப் படையனென்றும் நேசனென்றும், தென்திசைக்குத்
திலதமன்ன மறையோர்நாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பலருமேச வென்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.8

1326 கண்ணனென்றும் வானவர்கள் காதலித்து மலர்கள்தூவும்,
எண்ணனென்று மின்பனென்றும் ஏழுலுகுக் காதியென்றும்,
திண்ணமாட நீடுநாங்கைத் தேவதேவ னென்றென்றோதி,
பண்ணினன்ன மென்மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே 8.9

1327 பாருள்நல்ல மறையோர்நாங்கைப் பார்த்தன்பள்ளி செங்கண்மாலை,
வார்கொள்நல்ல முலைமடவாள் பாடலைந்தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள்நல்ல வேல்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள் இன்பம்நாளு மெய்துவாரே 8.10

1328 நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும்நும்மடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்தளூரீரே,
எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,
நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? 9.1

1329 சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. 9.2

1330 பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,
மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்
ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்
ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. 9.3

1331 ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,
காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. 9.4

1332 தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு
மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்-
கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. 9.5

1333 சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,
எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,
நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,
எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. 9.6

1334 மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா
விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,
காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,
நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே 9.7

1335 முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி,
இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. 9.8

1336 எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,
இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே 9.9

1337 ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,
காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,
சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,
ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே 9.10

1338 ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்டொருகால் ஆலிலை வளர்ந்தவெம் பெருமான்,
பேய்ச்சியை முலயுண் டிணைமரு திறுத்துப் பெருநில மளந்தவன் கோயில்,
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களி னடுவே,
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால் திருவெள்ளி யங்குடி யதுவே 10.1



1339 ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்டரக்கர் தம் சிரங்களை யுருட்டி,
கார்நிறை மேகம் கலந்தோ ருருவக் கண்ணனார் கருதிய கோயில்,
பூநீரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப் பொதும்பிடை வரிவண்டுமிண்டி,
தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும் திருவெள்ளி யங்குடி யதுவே 10.2

1340 கடுவிடமுடைய காளியன் தடத்தைக் கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவைநல் லார்கள் பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அடைபுடை தழுவி யண்டநின் றதிரும் திருவெள்ளி யங்குடி யதுவே 10.3

1341 கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்த்த காளமே கத்திரு வுருவன்,
பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்,
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும் தொகுதிரை மண்ணியின் தென்பால்,
செறிமணி மாடக் கொடிகதி ரணவும் திருவெள்ளி யங்குடி யதுவே 10.4

1342 பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கையெறிந்து, ஒருகால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால் சென்றுறை கோயில்,
ஏர்நிரை வயளுள் வாளைகள் மறுகி எமக்கிட மன்றிதென்றெண்ணி,
சீர்மலி பொய்கை சென்றணை கின்ற திருவெள்ளி யங்குடி யதுவே 10.5

1343 காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை உறக்கட லரக்கர்தம் சேனை,
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில் இராமன் தன் கோயில்,
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,
சேற்றிடைக் கயல்க ளுள்திகழ் வயல்சூழ் திருவெள்ளி யங்குடி யதுவே 10.6

1344 ஓள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு,
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளி யங்குடி யதுவே 10.7

1345 முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய்
மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்,
படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்,
விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே 10.8

1346 குடிகுடி யாகக் கூடிநின் றமரர் குணங்களே பிதற்றிநின் றேத்த
அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற ஆழியா நமர்ந்துறை கோயில்,
கடியுடைக் கமலம் அடியிடை மலரக் கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,
வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும் வயல்வெள்ளி யங்குடி யதுவே 10.9

1347 பண்டுமுன் ஏன மாகியன் றொருகால், பாரிடந் தெயிற்றினில் கொண்டு,
தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளி யங்குடி யானை,
வண்டறை சோலை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
கொண்டிவை பாடும் தவமுடையார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே 10.10