திருவாய் மொழி ஆறாம் பத்து

3343 வைகல்பூங் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்,
செய்கொள் செந்நெ லுயர்திருவண்வண் டூருறையும்,
கைகொள் சக்கரத் தென்கனி வாய்பெரு மானைக்கண்டு,
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே. 1.1

3344 காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்,
வேத வேள்வி யொலிமுழங்கும் தண் டிருவண்வண்டூர்,
நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெரு மானைக்கண்டு,
பாதம் கைதொழுது பணியீ ரடியேன் திறமே. 1.2

3345 திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே. 1.3

3346 இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே. 1.4

3347 உணர்த்த லூட லுணர்ந்துடன் மேயும் மடவன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள் மேல்சங்கு சேரும் திருவண்வண்டூர்,
புணர்த்த பூந்தண் டுழாய்முடி நம்பெரு மானைக்கண்டு,
புணர்த்த கையினரா யடியேனுக்கும் போற்றுமினே. 1.5

3348 போற்றியான் இரந் தேன்புன்னை மேலுறை பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண் டூருறையும்,
ஆற்ற லாழியங் கையம ரர்பெரு மானைக்கண்டு,
மாற்றங் கொண்டரு ளீர்மையல் தீர்வ தொருவண்ணமே. 1.6

3349 ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு
ஒன்றுரை யொண்கிளியே,
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர்
வேலை திருவண்வண்டூர்,
கருவண்ணம் செய்யவாய் செய்யகண்
செய்யகை செய்யகால்,
செருவொண் சக்கரம் சங்கடை
யாளம் திருந்தக் கண்டே. 1.7

3350 திருந்தக் கண்டெனக் கொன்றுரை
யாயொண் சிறுபூவாய்.
செருந்தி ஞாழல் மகிழ்புன்னை
சூழ்தண் டிருவண்வண்டூர்,
பெருந்தண் தாமரைக் கண்பெரு
நீண்முடி நாள்தடந்தோள்,
கருந்திண் மாமுகில் போல்திரு
மேனி யடிகளையே. 1.8

3351 அடிகள் கைதொழு தலர்மேல்
அசையும் அன்னங்காள்,
விடிவை சங்கொலிக் கும்திரு
வண்வண் டூருறையும்,
கடிய மாயன்தன் னைக்கண்ணனை
நெடு மாலைக்கண்டு,
கொடிய வல்வினை யேன்திறம்
கூறுமின் வேறுகொண்டே. 1.9

3352 வேறு கொண்டும்மை யானிரந்
தேன்வெறி வண்டினங்காள்,
தேறு நீர்ப்பம் பைவட
பாலைத் திருவண்வண்டூர்,
மாறில் போரரக் கன்மதிள்
நீறெழச் செற்றுகந்த,
ஏறுசேவக னார்க்கென்னை
யுமுளள் என்மின்களே. 1.10

3353 மின்கொள் சேர்புரி நூல்குற
ளாயகல் ஞாலம்கொண்ட,
வன்கள் வனடி மேல்குரு
கூர்ச்சட கோபன்சொன்ன,
பண்கொள் ஆயிரத் துள்ளிவை
பத்தும் திருவண்வண்டூர்க்கு,
இன்கொள் பாடல் வல்லார்
மதனர்மின் னிடையவர்க்கே. 1.11

3354 மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்
முன்புநா னதஞ்சுவன்,
மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் னினியது
கொண்டு செய்வதென்,
என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ. 2.1

3355 போகுநம் பீ.உன்தாமரை புரைகண் ணிணையும்
செவ்வாய் முறுவலும்,
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,
தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார்
செவியோசை வைத்தெழ,
ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே. 2.2

3356 போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத
வர்க்குரை நம்பி, நின்செய்ய
வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,
வேயி ருந்தடந் தோளினா ரித்திரு
வருள்பெறு வார்யவர் கொல்
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே? 2.3

3357 ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந்
தாய்,உன் மாயங்கள்
மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?
வேலி னேர்த்தடங் கண்ணினார் விளையாடு
சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்கவல் லாய்.எம்மைநீ கழறேலே. 2.4

3358 கழறேல் நம்பீ.உன் கைதவம் மண்ணும் விண்ணும்
நன்கறியும், திண்சக்கர
நீழறு தொல்படை யாய்.உனக் கொன்றுணர்த் துவன் நான்,
மழறு தேன்மொழி யார்கள் நின்னருள்
சூடுவார் மனம் வாடி நிற்க,எம்
குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே. 2.5

3359 குழகி யெங்கள் குழமணன் கொண்டு
கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,
பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,
அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும்
தேவிதமை தகுவார் பலருளர்,
கழக மேறேல் நம்பீ.உனக்கும் இளைதே கன்மமே. 2.6

3360 கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது
கடல்ஞா முண்டிட்ட,
நின்மலா. நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி
அதுகேட்கில் என்னைமார்,
தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே. 2.7

3361 பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல்
பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப்
போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே? 2.8

3362 உகவையால் நெஞ்சம் உள்ளுருகி
உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,
அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு
சிறுசோறுங் கண்டு,நின்
முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. 2.9

3363 நின்றிலங்கு முடியினாய். இருபத் தோர் கால்
அரசு களை கட்ட,
வென்றி நீண்மழுவா. வியன்ஞாலம் முன்படைத்தாய்,
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத்
தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,
நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே. 2.10

3364 ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்
வார்த்தையுள், சீற்ற முண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்,
ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு
மோர்பத் திசையோடும்,
நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே. 2.11

3365 நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,
பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 3.1

3366 கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,
கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,
தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே. 3.2

3367 நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்,
நிகரில்சூழ் சுடராயிரு ளாய்நில னாய்விசும்பாய்,
சிகரமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
புகர்கொள் கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும் புண்ணியமே. 3.3

3368 புண்ணியம் பாவம்
புணர்ச்சிபிரி வென்றிவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய்
இன்மயாயல்லனாய்,
திண்ணமா டங்கள்சூழ்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
கண்ணனின் னருளேகண்டு
கொண்மின்கள் கைதவமே. 3.4

3369 கைதவம் செம்மை
கருமை வெளுமையுமாய்,
மெய்பொய் யிளமை
முதுமைபுதுமை பழமையுமாய்,
செய்யதிண் மதிள்சூழ்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பெய்தகாவு கண்டீர்
பெருந்தேவுடை மூவுலகே. 3.5

3370 மூவுலகங் களுமாய்
அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த்
தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே
யுறைகின்ற பரஞ்சுடரே. 3.6

3371 பரஞ்சுடர் உடம்பாய்
அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும்
கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை
யாவர்க்கும் வன்சரணே. 3.7

3372 வன்சரண் சுரர்க்காய்
அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,
தன்சரண் நிழற்கீ
ழுலகம்வைத்தும் வையாதும்,
தென்சரண் திசைக்குத்
திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
என்சரணென் கண்ணன்
என்னையாளுடை என்னப்பனே. 3.8

3373 என்னப்பன் எனக்காயிகுளாய்
என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன் மணியப்பன்
முத்தப்பனென் அப்பனுமாய்,
மின்னப்பொன் மதிள்சூழ்திரு
விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,
தன்னொப்பா ரில்லப்பன்
தந்தனன்தன தாள்நிழலே. 3.9

3374 நிழல்வெயில் சிறுமைபெருமை
குறுமை நெடுமையுமாய்,
சுழல்வனநிற் பனமற்று
மாயவை அல்லனுமாய்,
மழலைவாழ் வண்டுவாழ்
திருவிண்ணகர் மன்னுபிரான்,
கழல்களன்றி மற்றோர்
களைகணிலம் காண்மின்களே. 3.10

3375 காண்மின்க ளுலகீர். என்று
கண்முகப் பேநிமிர்ந்த,
தாளிணையன் தன்னைக் குருகூர்ச்
சடகோபன் சொன்ன,
ஆணையா யிரத்துத்திரு
விண்ணகர்ப்பத் தும்வல்லார்,
கோணையின்றி விண்ணோர்க்
கொன்றுமாவர் குரவர்களே. 3.11

3376 குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும்
குன்றமொன் றேந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்
உட்பட மற்றும்பல,
அரவில் பள்ளிப் பிரான்தன் மாய
வினைகளை யேயலற்றி,
இரவும் நன்பக லும்த விர்கிலம்
என்ன குறைவெனக்கே? 4.1

3377 கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த
தும்,கெண்டை யொண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்
மணந்ததும் மற்றும்பல,
மாயக் கோலப் பிரான்தன் செய்கை
நினைந்து மனம்குழைந்து,
நேயத் தோடு கழிந்த போதெனக்
கெவ்வுல கம்நிகரே? 4.2

3378 நிகரில் மல்லரைச் செற்ற தும்நிரை
மேய்த்ததும் நீணெடுங்கைச்,
சிகர மாகளி றட்டதும் இவை
போல்வனவும் பிறவும்,
புகர் கொள் சோதிப் பிரான்தன் செய்கை
நினைந்து புலம்பி,என்றும்
நுகர் வைகல் வைகப்பெற் றேன் எனக்கு
என்இ னி நோவதுவே? 4.3

3379 நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க
இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,
சாவப் பாலுண் டதும்ஊ ர் சகடம்
இறச்சா டியதும்,
தேவக் கோல பிரான்தன் செய்கை
நினைந்து மனம்குழைந்து,
மேவக் காலங்கள் கூடி னேன்எ னக்கு
என்இ னி வேண்டுவதே? 4.4

3380 வேண்டி தேவ ரிரக்க வந்து
பிறந்ததும் வீங்கிருள்வாய்,
பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர்
ஆய்க்குலம் புக்கதும்,
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத்
துஞ்சவஞ் சம்செய்ததும்,
ஈண்டு நான்அ லற் றப்பெற் றென்எ னக்கு
என்ன இகலுளதே? 4.5

3381 இகல்கொள் புள்ளை பிளந்த தும்இ மில்
ஏறுகள் செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும்
உட்பட மற்றும்பல,
அகல்கொள் வையம் அளந்த மாயனென்
அப்பன்றன் மாயங்களே,
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன
மனப்ப ரிப்பே? 4.6

3382 மனப்பரி போட ழுக்கு மானிட
சாதியில் தான்பிறந்து,
தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன
சீற்றத்தினை முடிக்கும்,
புனத்து ழாய்முடி மாலை மார்பனென்
அப்பன்தன் மாயங்களே,
நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி
யார்நிகர் நீணிலத்தே? 4.7

3383 நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும்
போர்கள் செய்து,
வாண னாயிரம் தோள்து ணித்ததும்
உட்பட மற்றும்பல,
மாணி யாய்நிலம் கொண்ட மாயனென்
அப்பன்றன் மாயங்களே,
காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென
கலக்க முண்டே? 4.8

3384 கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே
ழும்கழி யக்கடாய்,
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும்
உட்பட மற்றும்பல,
வலக்கை யாழி யிடக்கை சங்கம்
இவையுடை மால்வண்ணனை,
மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம்
மண்ணின் மிசையே? 4.9

3385 மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத
மாபெ ரும்போர்,
பண்ணி, மாயங்கள் செய்து, சேனையைப்
பாழ்பட நூற்றிட்டுப்போய்,
விண்மி சைத்தன தாம மேபுக
மேவிய சோதிதன்தாள்,
நண்ணி நான்வணங் கப்பெற் றென்எனக்
கார்பிறர் நாயகரே? 4.10

3386 நாய கன்முழு வேழுல குக்குமாய்
முழுவே ழுலகும்,தன்
வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய்
அவையல் லனுமாம்,
கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட
கோபன் சொன்ன
தூய வாயிரத் திப்பத்தால்
பத்தராவர் துவளின்றியே. 4.11

3387 துவளில் மாமணி மாட மோங்கு
தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்.உமக்
காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும்
தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க
நின்று நின்று குமுறுமே. 5.1

3388 குமுறு மோசை விழவொ லித்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக்
காசை யின்றி அகற்றினீர்,
திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள்
தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க
நெக்கொ சிந்து கரையுமே. 5.2

3389 கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக்
காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்து சேர்ந்த தும்திசை
ஞாலம் தாவி யளந்ததும்,
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி
நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே. 5.3

3390 நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை
வில்லி மங்கலங் கண்டபின்,
அற்க மொன்றும் அறிவு றாள்மலிந்
தாள்கண் டீரிவள் அன்னைமீர்,
கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல்
வண்ணன் கண்ணபி ரானென்றே,
ஒற்க மொன்றுமி லள்உகந்துகந்து
உள்மகிழ்ந்து குழையுமே. 5.4

3391 குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை
வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்f
பிரானி ருந்தமை காட்டினீர்,
மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொடு
அன்று தொட்டும்மை யாந்து,இவள்
நுழையும் சிந்தையள் அன்னை மீர்.தொழும்
அத்தி சையுற்று நோக்கியே. 5.5

3392 நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு
செந்நெ லோங்குசெந் தாமரை,
வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை
வந்தொ லைவில்லி மங்கலம்,
நோக்கு மேல்அ த் திசையல் லால்மறு
நோக்கி லள்வைகல் நாள்டொறும்,
வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன்
நாம மேயிவள் அன்னைமீர். 5.6

3393 அன்னை மீர்.அணி மாம யில்சிறு
மானி வள்நம்மைக் கைவலிந்து,
என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை
வில்லி மங்கலம் என்றல்லால்,
முன்னம் நோற்ற விதிகொ லோமுகில்
வண்ணன் மாயங்கொ லோ,அவன்
சின்ன மும்திரு நாம முமிவள்
வாய னகள்தி ருந்தவே. 5.7

3394 திருந்து வேதமும் வேள்வி யும்திரு
மாம களிரும் தாம்,மலிந்,
திருந்து வாழ்பொரு நல்வ டகரை
வண்தொ லைவில்லி மங்கலம்,
கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅ ந்
நாள்தொ டங்கியிந் நாள்தொறும்,
இருந்தி ருந்து தர விந்த லோசன.
என்றேன் றேநைந்தி ரங்குமே. 5.8

3395 இரங்கி நாள்தொறும் வாய்வெ ரீஇ யிவள்
கண்ண நீர்கள் அலமர,
மரங்க ளுமிரங் குவ கை மணி
வண்ண வோ. என்று கூவுமால்,
துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை
வில்லி மங்கல மென்று,தன்
கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு
நாமங் கற்றதற் பின்னையே. 5.9

3396 பின்னை கொல்நில மாம கள்கொல்?
திரும கள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு
மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை
யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அ வ் வூர்த்திரு
நாமம் கேட்பது சிந்தையே. 5.10

3397 சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையினாலும்
தேவ பிரானையே,
தந்தை தாயென் றடைந்த வண்குரு
கூர வர்சட கோபன்சொல்,
முந்தை யாயிரத் துள்ளி வைதொலை
வில்லி மங்கலத் தைச்சொன்ன,
செந்தமிழ்பத்தும் வல்லாரடிமை
செய் வார்திரு மாலுக்கே. 5.11

3398 மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்
ஏலக் குழலி யிழந்தது சங்கே. 6.1

3399 சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,
செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,
கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்
மங்கை யிழந்தது மாமை நிறமே. 6.2

3400 நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,
திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே. 6.3

3401 பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே. 6.4

3402 பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்
கண்புனை கோதை இழந்தது கற்பே. 6.5

3403 கற்பகக் காவன நற்பல தோளற்கு,
பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,
நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்
விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே. 6.6

3404 மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,
பையர வினணைப் பள்ளியி னானுக்கு,
கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே. 6.7

3405 சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்
வாசக் குழலி இழந்தது மாண்பே. 6.8

3406 மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே. 6.9

3407 பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,
நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்
கற்புடை யாட்டி யிழந்தது கட்டே. 6.10

3408 கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,
கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,
கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
கட்டெழில் வானவர் போகமுண் பாரே. 6.11

3409 உண்ணுஞ் சோறு பருகுநீர்
தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென்
றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்
கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு
மூர்திருக் கோளூரே. 7.1

3410 ஊரும் நாடும் உலகும்
தன்னைப்போல், அவனுடைய
பேரும் தார்களு மேபிதற்றக்
கற்பு வானிடறி,
சேருநல் வளஞ்சேர் பழனத்
திருகோ ளூர்க்கே,
போருங் கொலுரை யீர்க்கொடி
யேன்கொடி பூவைகளே. 7.2

3411 பூவை பைங்கிளிகள் பந்து
தூதைபூம் புட்டில்கள்,
யாவையும் திருமால் திருநாமங்
களேகூவி யெழும்,என்
பாவை போயினித் தண்பழனத்
திருக்கோ ளூர்க்கே,
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணோ
டென்செய் யுங்கொலோ? 7.3

3412 கொல்லை யென்பர்கொ லோகுணம்
மிக்கனள் என்பர்கொலோ,
சிலலை வாய்ப்பெண் டுகளயற்
சேரியுள் ளாருமெல்லே,
செல்வம் மல்கி யவன்கிடந்த
திருக்கோ ளூர்க்கே,
மெல்லிடை நுடங்க இளமான்
செல்ல மேவினளே. 7.4

3413 மேவி நைந்து நைந்துவிளை
யாடலுறா ளென்சிறுத்
தேவிபோய், இனித்தன்
திருமால் திருக்கோ ளூரில்,
பூவியல் பொழிலும் தடமும்
அவன்கோ யிலுங்கண்டு,
ஆவியுள் குளிர எங்ஙனே
யுகக்குங்கொல் இன்றே? 7.5

3414 இன்றெனக் குதவா தகன்ற
இளமான் இனிப்போய்,
தென்திசைத் திலத மனைய
திருக்கோ ளூர்க்கே
சென்று,தன் திருமால் திருக்கண்ணும்
செவ்வாயும் கண்டு,
நின்று நின்று நையும்
நெடுங்கண்கள் பனிமல்கவே. 7.6

3415 மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,
அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,
ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே? 7.7

3416 ஒசிந்த நுண்ணிடை மேல்கையை
வைத்து நொந்துநொந்து,
கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண
நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,
ஒசிந்த வொண்மல ராள்கொழுநன்
திருக்கோ ளூர்க்கே,
கசிந்த நெஞ்சின ளாயெம்மை
நீத்தஎ ம் காரிகையே? 7.8

3417 காரியம் நல்லன களவை காணிலென்
கண்ணனுக்கென்று,
ஈரியா யிருப்பாளி தெல்லாம்
கிடக்க இனிப்போய்,
சேரி பல்பழி தூயிரைப்பத்
திருக்கோ ளூர்க்கே,
நேரிழை நடந்தா ளெம்மை
யொன்றும் நினைத்திலளே. 7.9

3418 நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண்
இளமான் இனிப்போய்,
அனைத்து லகுமு டைய
அரவிந்த லோசனனை,
தினைத்தனை யும்விடா ளவன்சேர்
திருக்கோ ளூர்க்கே,
மனைக்கு வான்பழியும் நினையாள்
செல்ல வைத்தனளே. 7.10

3419 வைத்த மாநிதி யாம்மது
சூதனை யேயலற்றி,
கொத்த லர்பொழில் சூழ்குரு
கூர்ச்சட கோபன்சொன்ன,
பத்து நூறு ளிப்பத்
தவன்சேர் திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து ரைப்பார்
திகழ்பொன் னுலகாள்வாரே. 7.11

3420 பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே? 8.1

3421 மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு
மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்.விரைந் தோடிவந்தே? 8.2

3422 ஓடிவந் தென்குழல்மேல் ஒளிமாமல ரூதீரோ,
கூடிய வண்டினங்காள். குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறெழ செற்றபிரான்,
சூடிய தண்டுளவ முண்டதூமது வாய்கள்கொண்டே? 8.3

3423 தூமது வாய்கள்கொண்டு
வந்தென்முல்லைகள் மேல்தும்பிகாள்,
பூமது வுண்ணச்செல்லில்
வினையேனைப் பொய்செய்தகன்ற,
மாமது வார்தண்டுழாய்
முடிவானவர் கோனைக்கண்டு,
யாமிது வோதக்கவா
றென்னவேண்டும்கண் டீர்நுங்கட்கே. 8.4

3424 நுங்கட்கி யானுரைக்கேன்
வம்மின்யான்வளர்த் தகிளிகாள்,
வெங்கட்புள் ளூர்ந்துவந்து
வினையேனைநெஞ் சம்கவர்ந்த,
செங்கட் கருமுகிலைச்
செய்யவாய்ச்செழுங் கற்பகத்தை,
எங்குச்சென் றாகிலும்கண்
டிதுவோதக்க வாறென்மினே. 8.5

3425 என்மின்னு நூல்மார்வ
னென்கரும்பெரு மானென்கண்ணன்,
தன்மன்னு நீள்கழல்மேல்
தண்டுழாய்நமக் கன்றிநல்கான்,
கன்மின்க ளென்றும்மையான்
கற்பியாவைத்த மாற்றம்சொல்லி,
சென்மின்கள் தீவினையேன்
வளர்த்தசிறு பூவைகளே. 8.6

3426 பூவைகள் போல்நிறத்தன்
புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய்
நின்றமாயனென் ஆழிபிரான்,
மாவைவல் வாய்பிளந்த
மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள். தீர்க்கிற்றிரே
வினையாட்டியேன் பாசறவே. 8.7

3427 பாசற வெய்தியின்னே
வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக்
குருகே.அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர்
முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால்
மறுநோக்கிலள் பேர்த்துமற்றே. 8.8

3428 பேர்த்துமற் றோர்களைகண்
வினையாட்டியேன் நானொன்றிலேன்,
நீர்த்திரை மேலுலவி
யிரைதேரும்பு தாவினங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல்
கண்ணன்விண்ணவர் கோனைக்கண்டு,
வார்த்தைகள் கொண்டருளி
யுரையீர்வைகல் வந்திருந்தே. 8.9

3429 வந்திருந் தும்முடைய
மணிச்சேவலும் நீருமெல்லாம்,
அந்தர மொன்றுமின்றி
யலர்மேலசை யுமன்னங்காள்,
என்திரு மார்வற்கென்னை
யின்னாவாறிவள் காண்மினென்று,
மந்திரத் தொன்றுணர்த்தி
யுரையீர்வைகல் மறுமாற்றங்களே. 8.10

3430 மாற்றங்க ளாய்ந்துகொண்டு
மதுசூதபி ரானடிமேல்,
நாற்றங்கொள் பூம்பொழில்சூழ்
குருகூர்ச்சட கோபன்சொன்ன,
தோற்றங்க ளாயிரத்துள்
இவையுமொரு பத்தும்வல்லார்,
ஊற்றின்கண் நுண்மணல்போல்
உருகாநிற்பர் நீராயே. 8.11

3431 நீராய் நிலனாய் தீயாய்க் காலாய் நெடுவானாய்,
சீரார் சுடர்க்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாய்,
கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால்
வாராய், ஒருநாள் மண்ணும் விண்ணும் மகிழவே. 9.1

3432 மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி,
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி யுனைநான் கண்டு கந்து கூத்தாட,
நண்ணி யொருநாள் ஞாலத் தூடே நடவாயே. 9.2

3433 ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ? 9.3

3434 தளர்ந்தும் முறிந்தும் சகட வசுரர் உடல்வேறா,
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ,
விளங்க வொருநாள் காண வாராய் விண்மீதே. 9.4

3435 விண்மீதிருப்பாய். மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்,
மண்மீதுழல்வாய். இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்,
எண்மீதியன்ற புறவண்டத்தாய். எனதாவி,
உண்மீதாடி உருக்காட்டாதே யொளிப்பாயோ? 9.5

3436 பாயோர் அடிவைத் ததன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாய்,ஓர் அடியாய் எல்லா வுலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி யெனைநாளும்,
தீயோடுடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? 9.6

3437 உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்,
உலகுக் கேயோ ருயிரு மானாய் புறவண்டத்து,
அலகில் பொலிந்த திசைபத் தாய அருவேயோ,
அலகில் பொலிந்த அறிவி லேனுக் கருளாயே. 9.7

3438 அறிவி லேனுக் கருளாய் அறிவா ருயிரானாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி. அடியேன் நெடுமாலே,
கிறிசெய் தென்னைப் புறதிட் டின்னம் கெடுப்பாயோ,
பிறிதொன் றறியா அடியே னாவி திகைக்கவே? 9.8

3439 ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்,
பாவி யேனைப் பலநீ காட்டிப் படுப்பாயோ,
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே,
கூவிக் கொள்ளும் கால மின்னம் குறுகாதோ? 9.9

3440 குறுகா நீளா இறுதி கூடா எனையூழி,
சிறுகா பெருகா அளவி லின்பம் சேர்ந்தாலும்,
மறுகா லின்றி மாயோ னுனக்கே யாளாகும்,
சிறுகா லத்தை யுறுமோ அந்தோ தெரியிலே? 9.10

3441 தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,
தெரியச் சொன்ன ஓரா யிரத்து ளிப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே. 9.11

3442 உலகம் உண்ட பெருவாயா.
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி.
நெடியாய். அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம்
கூடு மாறு கூறாயே. 10.1

3443 கூறாய் நீறாய் நிலனாகிக்
கொடுவல் லசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி
வலவா. தெய்வக் கோமானே,
சேறார் சுனைத்தா மரைசெந்தீ
மலரும் திருவேங் கடத்தானே,
ஆறா அன்பில் அடியேனுன்
அடிசேர் வண்ணம் அருளாயே. 10.2

3444 வண்ண மருள்கொள் அணிமேக
வண்ணா. மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே. இமையோர் அதிபதியே,
தெண்ணல் அருவி மணிபொன்முத்
தலைக்கும் திருவேங் கடத்தானே,
அண்ண லே.உன் அடிசேர
அடியேற் காவா வென்னாயே. 10.3

3445 ஆவா வென்னா துலகத்தை
அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த
சிலையா. திருமா மகள்கேள்வா,
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே,
பூவார் கழல்கள் அருவினையேன்
பொருந்து மாறு புணராயே. 10.4

3446 புணரா நின்ற மரமேழன்
றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின்
நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு
சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துன்பாதம்
சேர்வ தடியே னெந்நாளே? 10.5

3447 எந்நா ளேநாம் மண்ணளந்த
இணைத்தா மரைகள் காண்பதற்கெ ன்று,
எந்நா ளும்நின் றிமையோர்கள்
ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? 10.6

3448 அடியேன் மேவி யமர்கின்ற
அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே.
கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே.
திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம்
காண நோலா தாற்றேனே. 10.7

3449 நோலா தாற்றேன் நுன்பாதம்
காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன்பால்
வந்தாய் போல வாராயே. 10.8

3450 வந்தாய் போலே வாராதாய்.
வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய்
நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப்
பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ. அடியேன் உன்பாதம்
அகல கில்லேன் இறையுமே. 10.9

3451 அகல கில்லேன் இறையும் என்
றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன்
றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 10.10

3452 அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர்.
வாழ்மின் என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
பெரிய வானுள் நிலாவுவரே. 10.11